Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஹிஸ்புல்லா, பிள்ளையான், கருணா போன்றோர் மொட்டு அணியை சார்ந்திருப்பது ஏன்? – ஹக்கீம் விளக்கம்

ஹிஸ்புல்லா, பிள்ளையான், கருணா போன்றோர் மொட்டு அணியை சார்ந்திருப்பது ஏன்? – ஹக்கீம் விளக்கம்

1 minutes read

மொட்டு அணியிடம் தேசியப் பட்டியலை பெறுவதற்காக ஹிஸ்புல்லாஹ், பிள்ளையான், கருணா அம்மான் போன்றோர் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் சிறுபான்மை வாக்குகளை சிதறடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அரசியல் பணிமனையை நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்த ஜனாதிபதி தேர்தலானது அடுத்து வரவுள்ள எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கும், மாகாண சபை தேர்தலுக்குமான ஒரு ஒத்திகையாகும்.

இத்தேர்தலில் நாங்கள் வேட்பாளராக களமிறக்கியுள்ள சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வதன் மூலம் எதிர்கால அரசியல் இருப்பையும் சமூகத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

நாங்கள் ஆதரவளிக்கும் சஜித் பிரேமதாச இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறுவது நிச்சயம். அவரது தரப்பை பலப்படுத்துவதற்கு எங்களது வாக்குவங்கி பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது.

ஹிஸ்புல்லாஹ் தேசியப் பட்டியலில் மூலம் மீண்டும் நாடாளுமன்றம் நுழைவதற்காக சமூகத்தை அடகுவைத்து, கோட்டபாயவுக்கு வாக்குகளை சேகரிக்கும் வேட்டையில் இறங்கியிருக்கிறார். நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாகவுள்ள கோட்டபாயவை வெற்றிபெறச் செய்வதே ஹிஸ்புல்லாஹ் போன்றோரின் செயகலாகவுள்ளது.

தேசியப்பட்டியல் ஆசனங்களை ஒதுக்கித் தருவதாகக்கூறி, ஹிஸ்புல்லாஹ்வுடன் சேர்த்து பிள்ளையானும் கருணா அம்மானும் மொட்டு அணிக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். அவர்களின் இந்த நாடகம் ஒருபோதும் பலிக்காது. கோட்டபாயவும், மஹிந்த ராஜபக்ஷவும் சமயம் பார்த்து இவர்களுக்கு கழுத்தறுப்புச் செய்வார்கள்.

சஜித் பிரேமதாசவை வெல்லவைக்கும் நோக்கில் சகல மாவட்டத்திலும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய ஏனைய கட்சிகளோடு முரண்பட்டுக் கொள்ளாத வகையிங் எங்களது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். சிறுபான்மை சமூகம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சஜித் பிரேமதாசவை தவிர வேறொரு தெரிவு இருக்கமுடியாது” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், மன்சூர் ஏ. காதிர், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கல்குடா தொகுதி அமைப்பாளர் றியாழ், இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More