அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மன்னார் நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
நகர பிதாவாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, துணை நகர பிதாவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் நூர் முகம்மது முகம்மது உசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நகர சபையின் நகர பிதா மற்றும் துணை நகர பிதாவைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று முற்பகல் 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவந்தினி பாபு தலைமையில் மன்னார் நகர சபையில் நடைபெற்றது.
இதன்போது நகர பிதாவைத் தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் டானியல் வசந்தன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
சபைக்குத் தெரிவாகியுள்ள 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் இன்றைய அமர்வுக்கு வருகை தந்ததோடு, ஓர் உறுப்பினர் வருகை தரவில்லை.
நகர பிதா தெரிவில் அதிக உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பைக் கோரினர்.
அமர்வில் கலந்துகொண்ட 15 உறுப்பினர்களில் 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஓர் உறுப்பினர் நடுநிலை வகித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்கு 6 வாக்குகளும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் டானியல் வசந்தனுக்கு 8 வாக்குகளும் கிடைத்தன.
அதற்கமைய கூடிய வாக்குகளைப் பெற்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் டானியல் வசந்தன் மன்னார் நகர சபையின் நகர பிதாவாகத் தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து துணை நகர பிதா தெரிவு இடம்பெற்றது.
துணை நகர பிதா தெரிவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் நூர் முகம்மது முகம்மது உசன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சோமநாத் பிரசாத் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதன்போது கூடுதலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பைக் கோரினர்.
வாக்களிப்பில் இரண்டு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது முகம்மது உசன் 8 வாக்குகளையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் 5 வாக்குகளையும் பெற்றனர்.
அதற்கமைய கூடுதல் வாக்குகளைப் பெற்ற நூர் முகம்மது முகம்மது உசன் மன்னார் நகர சபையின் துணை நகர பிதாவாகத் தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தெரிவுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.