உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்கு இலங்கையுடன் சேர்த்து ஒன்பது அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன என சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின்தெரிவித்துள்ளது.
இதில் 2019 தொடக்கம் 2023 வரை நடத்தப்பட்ட உலகக் கிண்ண தகுதிக்கான இரு லீக் ஒருநாள் தொடர்கள் மூலம் இணை அங்கத்துவ நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், ஸ்கொட்லாந்து, ஓமான் மற்றும் நேபாள அணிகள் இந்தத் தகுதிகாண் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன.
இந்த நாடுகளுடன் ஒருநாள் சுப்பர் லீக்கில் கடைசி ஐந்து இடங்களை பிடித்திருக்கும் அணிகளில் நெதர்லாந்து, சிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இந்த தகுதிகாண் சுற்றில் ஆடவுள்ளன.
இதில் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறுவதில் தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே தொடர்ந்து போட்டி நிலவும் நிலையில் நேரடித் தகுதி பெறாத அணி தகுதிகாண் சுற்றில் பத்தாவது அணியாக உறுதி செய்யப்படும்.
இதில் அயர்லாந்து மூன்று போட்டிகளிலும் வென்றால் தென்னாபிரிக்காவுடன் சமமான புள்ளிகளை பகிர்ந்துகொள்ளும் என்பதோடு நிகர ஓட்ட விகிதம் அடிப்படையிலேயே நேரடித் தகுதி பெறும் அணி தீர்மானிக்கப்படும்.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சிம்பாப்வேயில் நடைபெறவிருப்பதோடு இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும்.