உஸ்பெகிஸ்தானின் தஷ்கென்ட் பன்யொத்கோர் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் எவ் குழுவுக்கான ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளன (AFC) மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றில் இலங்கை மேலும் ஒரு மோசமான தோல்வியைத் தழுவியது.
தனது ஆரம்பப் போட்டியில் உஸ்பெகிஸ்தானிடம் 0 – 10 என்ற கோல்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இலங்கை, புதன்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நெபாளத்திடம் 0 – 8 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நேபாள அணித் தலைவி சபித்ரா பண்டாரி, ஹெட் – ட்ரிக் முறையில் கோல்களைப் போட்டு அசத்தினார்.
நேபாளத்தின் வேகம், விவேகம், சிறந்த புரிந்துணர்வு ஆகியவற்றுக்கு இலங்கையினால் ஈடுகொடுக்க முடியாமல் போனது.
போட்டியின் 7ஆவது நிமிடத்தில் அனித்தா பஸ்நெட்டின் கோர்ணர் கிக் பந்தை கிதா ரானா தலையால் முட்டி நேபாளத்தின் முதலாவது கோலைப் புகுத்தினார்.
இரண்டாவது கோலிலும் அனித்தா பஸ்நெட்டின் பங்களிப்பு இருக்க செய்தது.
போட்டியின் 20ஆவது நிமிடத்தில் அவர் பரிமாறிய பந்தை இலங்கை கோல்காப்காளர் சக்குரா செவ்வந்தி சுபசிங்க திசை திருப்பத் தவறினார். இதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட நேபாள அணித் தலைவி சபித்ரா பண்டாரி மிக அலாதியாக கோல் போட்டு நேபாளத்தின் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார்.
17 நிமிடங்கள் கழித்து சபித்ரா பண்டாரியின் ப்றீ கிக் கோல் மத்தியஸ்தரால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால், அடுத்த 5ஆவது நிமிடத்தில் சபித்ரா தனது 2ஆவது கோலை போட நேபாளம் 3 – 0 என முன்னிலை அடைந்தது.
இதனைத் தொடர்ந்து இடைவேளைக்கு முன்னரான உபாதையீடு நேரத்தில் சபித்ரா உயரே தாவி தனது தலையால் முட்டி ஹெட் ட்ரிக் கோலைப் பூர்த்திசெய்தார்.
இடைவேளையின்போது நேபாளம் 4 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.
இடைவேளைக்குப் பின்னர் 54ஆவது நிமிடத்தில் இலங்கையின் பெனல்டி எல்லைக்குள் வைத்து நேபாள வீரராங்கனை ரஷ்மி குமாரி கிஸிங்கை இலங்கை வீராங்னை ஒருவர் முரணான வகையில் வீழ்த்தினார்.
இதனை அடுத்து மத்தியஸ்தர் பெனல்டி ஒன்றை நேபளாத்திற்கு வழங்கினார்.
பெனல்டி உதைகளுக்கு பெயர் பெற்ற சபித்ரா, பெனால்டி வாய்ப்பை கீதாவுக்கு கொடுத்தார். கீதா மிக நேர்த்தியாக பெனல்டியை உதைத்து நேபாளத்தின் 5ஆவது கோலை போட்டார்.
62ஆவது நிமிடத்தில் அனித்தாவின் மற்றொரு கோர்ணர் கிக்கைப் பயன்படுத்தி நிஷா தோகார் தனது அணியின் 6ஆவது கோலைப் போட்டார்.
இதனைத் தொடர்ந்து மாற்று வீராங்கனை ரேகா பௌடெல் 78ஆவது நிமிடத்தில் போட்டி முடிவடைய ஒரு நிமிடம் இருந்தபோது நேபாளத்தின் 8ஆவது கோலை பூஜா ராணா போட்டார்.
இலங்கை தனது கடைசி தகுதிகாண் போட்டியில் லாஓசை எதிர்வரும் சனிக்கிழமை எதிர்த்தாடவுள்ளது.
அதே தினத்தன்று உஸ்பெகிஸ்தானை நேபாளம் சந்திக்கும்.