ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் மே மாத வரவு – செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) புகலிடக் கோரிக்கையாளர்கள் சேவைகளுக்கு 300 மில்லியன் ஆஸி. டொலர்களை அரசு ஒதுக்க வேண்டும் என மெல்பேர்னை மையமாகக் கொண்டு இயங்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் வள மையம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பல்வேறு வகையிலான விசாக்களில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அம்மையம் வலியுறுத்தியிருக்கிறது.
2016ஆம் ஆண்டு முதல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஆஸ்திரேலிய அரசு பெருமளவில் குறைத்திருக்கிறது. இதனால் இணைப்பு விசாக்களில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் தொண்டு உதவிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அம்மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015/16 இல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஆதரவு சேவைகளுக்காக 300 மில்லியன் ஆஸி. டொலர்கள் ஒதுக்கப்பட்டதாகவும் அதுவே 2021-22 இல் வெறும் 16.6 மில்லியன் ஆஸி. டொலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் வள மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கவில்லை என ஆஸ்திரேலிய உள்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“இந்த திட்டத்துக்கான நிதி என்பது தேவையைப் பொறுத்து ஒதுக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு இந்த சேவைகளைப் பெறும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது” என ஆஸ்திரேலிய உள்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இணைப்பு விசாக்களில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் அகதி அந்தஸ்து தீர்மானிக்கப்படும் வரை கல்வி கற்பதற்கான உரிமை, வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என மேற்படி மையம் பரிந்துரைத்துள்ளது.
இந்தச் சேவைகளின் மூலம் உதவி பெற்ற 7,000 புகலிடக் கோரிக்கையாளர்களில் 80 சதவீத பேர் நிலையான வருமானம் இல்லாதவர்கள் என அம்மையம் மதிப்பிடப்பட்டுள்ளது.
2022/23 வரவு – செலவுத் திட்டத்தை பொறுத்தமட்டில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஆதரவு சேவைகளுக்கு 40 மில்லியன் ஆஸி. டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில், இந்த சேவைகளின் கீழ் 1,500 பேருக்கு மேற்பட்டோர் பலன் பெறுவதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 70,000 ஆக உள்ள நிலையில், ஆதரவு சேவைகளின் கீழ் உதவிப்பெறுபவர்களின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதமாக உள்ளது. இதுவே 2015இல் இச்சேவைகளின் கீழ் பலன் பெற்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 25,000 ஆக இருந்திருக்கிறது.