இங்கிலாந்தின் குடியேற்றக் கொள்கைகளில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்கள், அந்நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டு குடும்பங்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
புதிய விதிகளின்படி, பெற்றோர் இங்கிலாந்தில் சட்டப்பூர்வ அனுமதியுடன் வசித்து வந்தாலும், அவர்களுடன் வாழும் பிள்ளைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் கீழ், ஐந்து குழந்தைகளுக்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் வெளியேற்றம் தொடர்பான கடிதங்களை அனுப்பியுள்ளது.
மேலும், தனது கணவருடன் இங்கிலாந்தில் வசித்து வரும் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும் வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெளியேற்ற உத்தரவை பெற்றுள்ள குடும்பங்களில் பெரும்பாலானோர் பராமரிப்புப் பணியாளர் (Care Worker) விசா திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் சட்டபூர்வமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய குடியேற்ற விதிகளின் தாக்கத்தால் சில குடும்பங்கள் பிரிந்து செல்லும் அபாயமும் உருவாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் பராமரிப்புப் பணியாளராக பணியாற்றி வரும் வருணி அரச்சிங்கே, தங்களது குடும்பத்திற்கும் வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தங்களது விசா விண்ணப்பங்களுக்காக ஆயிரக்கணக்கான பவுண்டுகளை சட்டப்படி செலுத்தியுள்ளதுடன், இங்கிலாந்தில் எந்தவொரு அரச நலன்புரி சலுகைகளையும் பெறாமல், முறையாக வரிகளையும் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
இத்தகைய சூழ்நிலையில் கூட தங்களுக்கு வெளியேற்ற அறிவிப்பு வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தற்போது குடியேற்ற உரிமைகள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை இங்கிலாந்தில் தீவிரப்படுத்தியுள்ளது.