ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான பொது இறுதிச்சடங்கு மூன்று நாட்கள் நடைபெறவுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, தலைநகர் தெஹ்ரான், மத முக்கியத்துவம் வாய்ந்த கொம் மற்றும் மஷாத் ஆகிய நகரங்களில் இறுதிச்சடங்கு மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் மதத் தலைவர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் 24 மணி நேரம் நீடிக்கும் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இந்த நிகழ்வில் சுமார் இரண்டு கோடி மக்கள் வரை பங்கேற்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாக, மஷாத் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா புனிதத் தலத்தில் அயதுல்லா அலி கமேனியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
86 வயதான அயதுல்லா அலி கமேனி, சுமார் 37 ஆண்டுகள் ஈரானின் தலைமைப் பொறுப்பில் இருந்து நாட்டின் அரசியல் மற்றும் மதத் துறைகளில் முக்கிய செல்வாக்கு செலுத்தியவராகக் கருதப்படுகிறார்.
அவரது மறைவைத் தொடர்ந்து நடைபெறவிருந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகள், அப்பகுதியில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.