சஃபோல்க் (Suffolk) கடற்கரையில் உள்ள டன்விச் ஹீத் (Dunwich Heath) பகுதியில் புதன்கிழமை மாலை பெரும் காட்டுத்தீ ஏற்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதியில் “பெரிய அளவிலான பாதிப்பு” என அதிகாரிகள் பிரகடனம் செய்துள்ளனர். இந்தத் தீ சுமார் 14 கால்பந்து மைதானங்களின் பரப்பளவுக்கு அதாவது சுமார் 10 ஹெக்டேர் பரவியுள்ளது.
தீ விபத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள வீடுகள் மற்றும் கேரவன் பூங்காக்களில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
வெளியேற்றப்பட்டவர்களில் கைக்குழந்தைகளுடன் கூடிய குடும்பங்கள் மற்றும் முதியவர்கள் உட்பட சுமார் 60 பேர் வெஸ்ட்லெடன் கிராம மண்டபத்தில் (Westleton Village Hall) தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
தீயணைப்புப் பணியில் உச்சகட்டமாக சுமார் 90 வீரர்கள் ஈடுபட்டனர். தற்போது 70 வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தீ விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 4 மைல் (6.4 கி.மீ) தொலைவில் உள்ள சைஸ்வெல் பி (Sizewell B) அணுமின் நிலையத்துக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்று தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் கிழக்கு பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை மற்றும் வறட்சி காரணமாக இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விபத்து பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், புகையிலிருந்து பாதுகாப்பாக இருக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.