0
உலக மக்கள் தொகையை குறைக்கக் கூடிய சார்ஸ், கொரோனா போன்ற வைரஸ்களின் பிறப்பிடம் எது என்று கேட்டால் அது சீனாவின் ‘வெட் மார்க்கெட்’ ( Wet market ) எனப்படும் மரக்கறி, இறைச்சி சந்தைதான். 2003ல் சார்ஸ் வைரஸ் பரவி உலகளவில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர் . அவ் வைரஸ் மனிதனுக்கு பரவக் காரணம், சீனாவின் குயாங்டாங்க் மாகாணத்தில் விற்கப்பட்ட புனுகுப் பூனைகள்தான். அந்த பூனையிடமிருந்து மனிதனுக்கு சார்ஸ் வைரசை பரப்பிய பெருமை சீனாவின் இந்த சந்தையையே சேரும். அதே போல், தற்போது வரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை உயிரிழக்க காரணமான கொரோனாவை பரப்பியதும் இந்த வெட் மார்க்கெட்’ தான்.
ஹூபெய் மாகாணம் வுஹான் நகரத்திலுள்ள ஹூனான் கடலுணவு சந்தை எனப்படும் அந்த வெட் மார்க்கெட்டிலிருந்து வெளவால் கறி மூலமாக கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொரோனா பரவத் தொடங்கியதுமே முதல் வேலையாக சீனா அரசாங்கம் அனைத்து இறைச்சி சந்தைகளையும் மூட உத்தரவிட்டது. தற்போது, அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், மீண்டும் அச் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன.
சீனாவில் மூடப்பட்டிருந்த 94% சந்தைகள் மீண்டும் முழு வீச்சில் செயல்படத் தொடங்கி விட்டன. கொரோனாவின் பிறப்பிடமான ஹூனான் கடலுணவு சந்தைக்கு மட்டும் சீல் வைத்து பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பாம்பு, முதலை மற்றும் வனவிலங்குகளை விற்கவும் சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மற்றபடி, மீன், நண்டு போன்ற கடல் உயிரினங்களும், மற்ற இறைச்சி வகைகளும் வெட் மார்க்கெட்களில் விற்கத் தொடங்கியுள்ளன.
‘‘சீன சந்தைகளில் சுகாதாரமற்ற வகையில் இறைச்சி உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. அதிலிருந்து தான் புதுப்புது வைரஸ்கள் உருவாகின்றன. சீனா செய்த தவறால் இன்று உலகமே பெரும் விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்தே மீள முடியாத நிலையில், மீண்டும் சீனா வெட் மார்க்கெட்களை திறந்திருப்பதை உடனடியாக மூட வேண்டும்,’ என பல நாடுகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க எம்பிக்கள் குழு, அமெரிக்காவுக்கான சீன தூதரிடம் கடிதம் மூலம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது
சீன வெட் மார்க்கெட்களை திறக்க அனுமதித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் முடிவுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகளின் இறைச்சியை உண்பது கண்டிக்கத்தக்கது. இதிலிருந்து மனிதர்கள் விலகியிருக்க வேண்டிய நேரம் இது. இல்லாவிட்டால் சார்ஸ் 3.0 வைரசுக்கு உயிரிழக்க வேண்டியிருக்கும்’’ என ஹொங்கொங் மைக்ரோபயாலொஜிஸ்ட் பேராசிரியர் யன் எச்சரித்துள்ளார்.
ஆனால், இதைப்பற்றி எல்லாம் சீன அரசாங்கம் கவலைப்படமால் கிருமி நாசினிகளை தெளித்து சுத்தம் செய்து கண்துடைப்புக்காக சில கட்டுப்பாடுகளுடன் சீனா தொடர்ந்து நடத்திக் கொண்டே செல்கிறது.
வெட் மார்க்கெட் என்பது பொதுவாக வனவிலங்குகளை விற்கும் மார்க்கெட் என்றே பலர் கருதுகின்றனர். ஆனால், உண்மையில் அப்படியில்லை. வெட் மார்க்கெட் என்பவை ப்ரஷ் இறைச்சி, மரக்கறிகள், மீன்களை விற்கும் சந்தையாகும். இங்கு பல விலங்கு வகைகளும் உயிருடன் விற்கப்படுவதுண்டு. ஹூனான் கடல் உணவு சந்தை எனப்படும் வெட் மார்க்கெட்டில் தான் பாம்பு, மயில், வெளவால் மட்டுமின்றி கரடி கூட உயிருடன் கிடைக்கும். இதோடு, பல்லி, தேள், பூரான்களும் உயிருடன் விற்கப்படும். இறைச்சி, மரக்கறிகளை தண்ணீரால் சுத்தம் செய்வதால் எப்போதும் சந்தை முழுவதும் ஈரப்பதமாக இருக்கும். இதனால் அதை வெட் (ஈரப்பதம்) மார்க்கெட் என்கிறார்கள்.
வணக்கம் இலண்டனுக்காக – ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்