ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் திஹார் சிறைக்கு அனுப்புமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) 5ஆம் திகதியில் இருந்து வரும் 19ஆம் திகதி வரை அவர் திஹார் சிறையில் இருப்பார். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 21ஆம் திகதி சி.பி.ஐ. அமைப்பால் கைது செய்யப்பட்டார்.
ஏறக்குறைய 15 நாட்களாக சி.பி.ஐ. காவலில் ப.சிதம்பரம் இருந்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் தலைமையில் நடந்து வருகிறது.
செப்டம்பர் 5ஆம் திகதிவரை ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. காவலை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகரும் சி.பி.ஐ. காவலை 5ஆம் திகதிவரை நீட்டித்து உத்தரவிட்டார். சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த சி.பி.ஐ. காவல் இன்றோடு முடிந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜாமீனில் வெளிவர முடியாத உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனுவை ப.சிதம்பரம் தரப்பு நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றபின், அவரை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. ஆஜர்படுத்தினார்கள்.
ஐ.என்.எக்ஸ். வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார், ப.சிதம்பரம் தரப்பில் கபில் சிபல் ஆஜராகினார்.
இந்நிலையில், சிதம்பரத்தை சுதந்திரமாக நடமாடவிடக்கூடாது எனவும் சக்திவாய்ந்த மனிதர் என்பதால் ஆதாரங்களை அழித்துவிடுவார் என்றும் அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க வேண்டும் அமுலாக்கப்பிரிவு வழக்கில் அளிக்கப்பட்ட ஆவணங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதேவேளை, சிதம்பரத்துக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும் குற்றப்பத்திரிகை இல்லை ஆனால் சக்திவாய்ந்தவர் சாட்சிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறுகிறார்கள். ஆனால் ஆதாரங்கள் இல்லை எனவும் சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதுடன் அவருக்குத் தேவையான மருந்துகள் சிறையில் கிடைக்க வழி செய்யப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார்.