பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
பலாலி விமான நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பலாலியிலிருந்து சர்வதேச விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அந்தவகையில், வரும் செப்டெம்பரில் அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒக்டோபரில் விமாச சுவைளை ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழில் பொது மக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், பொறியியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடல் குறித்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவிக்கையில், “மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கடந்த மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று பிரதமர் அபிவிருத்தி நடவடிக்கைகளை்ப பார்வையிட்டுள்ளார்.
ஒக்டோபரில் சேவையை ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.