வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 24 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியுடன் தொடர்புடைய 49 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதனையடுத்து, வவுனியா நகர கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 103ஆக உயர்வடைந்துள்ளது.
வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு கடந்த 8ஆம் திகதி கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.