“நாட்டில் மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்சக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”
– இவ்வாறு ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டை விட்டோடிய பஸில் ராஜபகச் அண்மையில் நாடு திரும்பினார். பலமான அரசியல் இயக்கத்தை அவர் உருவாக்கபோவதாக சிலர் கூறித் திரிகின்றனர்.
விமான நிலையம் வந்த பஸிலுக்கு அவரின் சகாக்கள் மற்றும் அடியாட்களால் அரச அனுசரணையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. ஆனால், தான் நாட்டைவிட்டு செல்ல முற்படுகையில் விமான நிலைய ஊழியர்கள் தன்னை எப்படிக் கவனித்தார்கள் என்பதை பஸில் ராஜபக்ச மறந்துவிடக்கூடாது. மக்கள் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. கோரிக்கைகள் அவ்வாறே உள்ளன.
கொள்ளையர்கள், பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். இதையும் பஸில் உள்ளிட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதேவேளை, ஹிட்லர் பற்றி கதைப்பதற்கு முன்னர் ‘காற்சட்டை’யை எப்படி சரியாக அணிவது என்பதை ரணில் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.