அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவோருக்கு தங்களுடைய வரிப்பணம் செல்கிறது என்பது அமெரிக்காவில் வரி செலுத்துவோருக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளதாக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், அடுத்தாண்டு 2024 இல் நடைபெறவுள்ளது.
இதில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடப் போவதாக முன்னதாக அறிவித்திருந்தார்.
எனினும், டிரம்பிற்கு போட்டியாக தான் களமிறங்கப் போவதாக அதே கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் மாகாண கவர்னருமான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயும் அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், நிக்கி ஹாலே தனது டுவிட்டரில், “கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக சீனாவுக்கான உதவியை அமெரிக்கா நிறுத்தவேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், “எந்தவோர் அமெரிக்கரும், தன் பணம் மோசமான நபர்களுக்குச் சென்றடைவதை விரும்ப மாட்டார்கள். நான் ஜனாதிபதியாக தெரிவானால் அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படும் பாகிஸ்தான், சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவி கிடைப்பதை முழுமையாக தடுப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.