பிரான்ஸ் – ரீயூனியன் தீவுக்குள் நுழைய முயன்ற 46 இலங்கைப் பிரஜைகள் விமானம் மூலம் நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையர்கள் 46 பேரும் கடல் மார்க்கமாகப் பிரான்ஸ் நாட்டின் ரீயூனியன் தீவுக்குச் சட்டவிரோதமாக உட்பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் 2022 டிசம்பர் 02 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து IMUL – A- 0559 CHW இலக்கப் பல நாள் மீன்பிடி இழுவைப் படகில் புறப்பட்டனர் என்றும் கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு திரும்பிய 46 பேரும் சட்ட நடவடிக்கைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.