இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக, உலகின் அணு ஆயுதங்கள் குறித்த தகவல்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
இந்நிலையில், உலகளவில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து The Washington Post இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
1940களின் நடுப்பகுதியிலிருந்து 1990களின் முற்பகுதி வரை அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும், அவற்றின் நட்பு நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் போட்டியின் காலம் Cold War என்று அழைக்கப்படுகிறது.
இக்காலப்பகுதியில் மிக உயர்ந்த தொகையாக 70,000 அணு ஆயுதங்கள் இருந்துள்ளன. இருப்பினும், தற்காலத்தில் அவை 12,240ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் ரஷ்யாவும் உலகின் 87 சதவீத அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியன மிகுதி 13 சதவீத அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன.
மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் மட்டுமே அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு என்றும் அங்கே சுமார் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிடமும் எவ்வளவு அணுவாயுதங்கள் உள்ளன, அவை எங்கே உள்ளன என்பது இரகசியமாக வைத்துக்கொள்ளப்படுகிறது. 6 நாடுகள் பிற நாட்டின் அணுவாயுதங்களைப் பாதுகாத்து வருகின்றன. இத்தாலி, ஜெர்மனி உட்பட5 நாடுகள் அமெரிக்காவுக்காக அதைச் செய்கின்றன. இது வெளிப்படையாகத் தெரியும். ஒரு நாடு ரஷ்யாவுக்காக அதைச் செய்கிறது.
ரஷ்யாவின் அணுவாயுதங்கள், பெலருஸில் உள்ளன எனச் சொல்லப்படுகிறது. ஆனால், அதைப் உறுதிப்படுத்த போதிய சான்றுகள் இல்லை.
அணுவாயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், பிற நாடுகள் பயந்து போர் தொடுக்கமாட்டா என்ற கூற்று இன்றைய காலக்கட்டத்துக்குப் பொருந்தாது என்று The Washington Post செய்தியிடம் பேசிய நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தொடரும் போர் சூழலால் புதுவித ஆயுதப் போட்டி அதிகரிக்கலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தகவல் மூலம் : The Washington Post