வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம், இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
ஆலயத்தில் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் ஏழாம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதியும் நடைபெறும்.
24ஆம் திருவிழாவான தேர்த் திருவிழா, ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவம் நிறைவு பெறும்.
தொடர்புடைய செய்தி : நல்லூர் கந்தன் கொடியேற்றம் நாளை! – இன்று கொடிச்சீலை கையளிப்பு
நல்லூர் கோவில் சுற்றுவீதிகளில் நேற்றுத் திங்கட்கிழமை முதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதித் தடை, ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என்றும் வீதி மூடப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் மாற்று வீதிகள் ஊடாகவே பயணிக்க முடியும் என்றும் யாழ். மாநகர சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் வீதித் தடைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமைபோல மாநகர சபையால் வாகன அனுமதி அட்டை வழங்கப்படும்.
நிரந்தர தற்காலிக வியாபாரிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.