இலங்கை கடல் எல்லையினுள் அத்துமீறி பிரவேசித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 46 பேரையும் இன்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
தலைமன்னார் கடற்பரப்பில் கடநத சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் ஊடாக கடந்த திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த 46 இந்திய மீனவர்களையும் எதிர் வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனிடையே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அணைத்து இந்திய மீனவர்களையும் உடன் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கமைவாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக மன்னார் நீதிமன்றிற்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையின் பிரகாரம் குறித்த 46 இந்திய மீனவர்களும் இன்று (11.06.2014) காலை மன்னா நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் குறித்த 46 மீனவர்களையும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் விடுதலை செய்தார்.
எனினும் அவர்களுடைய 9 படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. -குறித்த மீனவர்கள் இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்