உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே உள்ளிட்ட 25 அணிகள், பிரேசில் மண்ணில் களமிறங்கின.
பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் துவங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
போட்டியை நடத்தும் பிரேசில் அணிக்கு அடுத்து, கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி அர்ஜென்டினா. கடந்த 1978, 1986 என, இருமுறை சாம்பியன் ஆன இந்த அணி, இம்முறை மெஸ்சி தலைமையில் சாதிக்க களமிறங்கியுள்ளது.
இதற்கான அர்ஜென்டினா அணி வீரர்கள் நேற்று பிரேசிலின் பெலோ ஹரிசாண்டே வந்தடைந்தனர். இந்த அணி இங்குள்ள வெஸ்பாசியானோவில் தங்கி பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இதேபோல உருகுவே, பிரான்ஸ் மற்றும் ஈகுவடார் அணிகளும் பிரேசில் சென்றன.