கடந்த ஆண்டு இதேநாளில் (12/06/2014) இலண்டனை தளமாகக்கொண்டு வணக்கம் லண்டன் இணையம் தனது பயணத்தை ஆரம்பித்தது. இந்த ஒருவருட பயணத்தில் எவற்றை சாதித்தோம் என நினைப்பதிலும் பார்க்க எவற்றை சாதிக்க என்ன முயற்சி செய்தோமென நினைக்க தோன்றுகின்றது. குழந்தை தவழ்ந்து நடக்க முயற்சி செய்வதுபோல, அதனால் சாதித்தவை என சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் ஆரோக்கியமான தத்தி நடை நடக்கின்றது. எதிர்காலம் பிரகாசமாக தோன்றுகின்றது.
இலண்டனில் நடக்கும் தமிழர் நிகழ்வுகளையும் தமிழருக்கு வேண்டிய நிகழ்வுகளையும் எமது இணையத்தில் நிரல் படுத்துவதன்மூலம் பலருக்கு அவற்றை எடுத்துச்செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளோம். மேலும் இணையத்தின் தரத்தையும் சுவையையும் கருத்தில்கொண்டு பல விடயங்களை இணைத்துள்ளோம். இவற்றின் தரத்தை உயர்த்தும் நோக்கம் எமது மனதில் பலமாக உண்டு.
நீண்ட நாள் கனவு கருக்கொள்வதுபோல எங்கள் எண்ணம் வடிவம் கொண்டபோது தோழமையோடு தம் கரங்கள் நீட்டிய அந்த நேசத்துக்குரியவர்களை இன்றைய நாளில் நினைத்துப் பார்க்கின்றோம். தோள் தட்டி ஊக்கம் தந்தவர்கள், பிழை சுட்டி திருத்திவிட்டவர்கள், எழுதியவற்றை எமக்கும் வெளியிட தந்தவர்கள், செய்திகளை சேகரித்துத் தந்தவர்கள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் தந்தவர்கள், புதிய பார்வையாளர்களை அறிமுகப்படுத்திவிட்டவர்கள் என இவர்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது. இவர்களுக்கு நன்றிகளுக்கு மேலாக எமது இதயத்தில் பெரிய இடமும் உண்டு.
ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். உங்கள் கருத்துக்களை அறிய கருத்துக்கணிப்பு ஒன்றினை செய்கின்றோம். உங்கள் எண்ணங்களையும் பதிவிடுங்கள்.
ஆதரவு தருகின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து என்றும் வணக்கம் லண்டன் இணையத்துடன் இணைந்து இருக்குமாறு இன்றைய நாளில் வேண்டிகொள்கின்றோம்.
நன்றி
வணக்கம் லண்டன் இணையம்