கடந்த சில வாரங்களாக வடகொரியா தனது பகுதியில் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அதற்கு கொரியா தீப கற்பத்தில் உள்ள தென் கொரியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சமீபத்தில் ஜப்பான் அருகே கிழக்கு கடல் பகுதியில் ‘2 ஸ்கட்’ ஏவுகணையும் வீசி சோதித்தது. இதனால் தென் கொரியா தனது எல்லையில் படைகளை உஷார் நிலையில் வைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்றும் கிழக்கு கடலில் வடகொரியா ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. 30 நிமிடங்கள் மட்டுமே நடந்த சோதனையில் 100 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் வீசப்பட்டன.
இவை வடகொரியாவின் 50 கி.மீட்டர் தூர கடல் எல்லைக்குள் வீசப்பட்டன. ஒரு ஏவுகணை கூட தென் கொரியா எல்லைக்குள் சென்று விழவில்லை. இருந்தும் தென் கொரியா எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
நாளை (16–ந்தேதி) முதல் 22–ந்தேதி வரை இப்பகுதியில் அமெரிக்கா–தென் கொரியா ராணுவங்கள் கூட்டு போர் பயிற்சி ஒத்திகை நடத்த உள்ளன.
அதில் அமெரிக்க கடற்படையின் ஜார்ஜ் வாஷிங்டன் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலும் இடம் பெறுகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த போர் பயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது.