உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி கால்பந்து அணியின் தலைவராக இருந்த பிலிப் லாம், சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெற்றார். இத்தகவலை அவரது மேலாளர் டிபிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டில் குரோஷியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சர்வதேச கால்பந்துக்கு அறிமுகமானார் லாம். ஜெர்மனி அணிக்காக 113 ஆட்டங்களில் விளையாடி 5 கோல்களை அடித்துள்ளார். “ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம்’ என லாம் கூறியதாக அவரது மேலாளர் ரோமன் க்ரில் தெரிவித்தார். “பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது, இதுதான் எனது கடைசி தொடர் என முடிவெடுத்தேன். ஜெர்மனி கால்பந்து சங்கத்துடன் சிறந்த புரிந்துணர்வு உள்ள நிலையிலேயே, ஓய்வு பெறுகிறேன்’ என்று லாம் கூறியுள்ளார். ஜெர்மனி கால்பந்து சங்கத் தலைவர் நெய்சர்பாச் கூறுகையில், “லாம், அசாதாரணமான வீரர் மட்டுமில்லை. சிறந்த முன்மாதிரியான வீரரும் கூட. அணிக்காக அவர் அளித்த பங்களிப்புக்கு நன்றிகள்’ என பாராட்டினார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் கிளப் சார்பில் தொடர்ந்து விளையாடுவேன் என்று லாம் உறுதியளித்தார்.