December 2, 2023 8:49 pm

பருத்தித்துறையில் வாள்வெட்டுத் தாக்குதல்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்., பருத்தித்துறையில் இளைஞன் ஒருவர் வீடொன்றுக்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பருத்தித்துறை, மூன்றாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் (வயது 50) என்பவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பருத்தித்துறை, இரண்டாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) எனும் இளைஞர் கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மூன்றாம் குறுக்குத் தெருவில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டுக்கு வெளியே அதிகாலை வேளை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தநிலையில் சுகுமாரின் வீட்டினுள், அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழு சுகுமார் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர் இரவு நேரம் எதற்காக அந்த வீட்டுக்கு அருகில் சென்றார் என்பது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள வீடொன்றில் வன்முறைக் கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளமை பொலிஸாருக்குப் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்