இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள பங்களாதேஷ் தூதரகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு, தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் பங்களாதேஷின் மைமன்சிங் (Mymensingh) நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்து ஆடைத் தொழிலாளியின் கொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமய நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டி, தீபு சந்திரா தாஸ் எனும் ஆடைத் தொழிலாளி கொல்லப்பட்டு, பின்னர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், பங்களாதேஷில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்தச் சூழ்நிலையில், பங்களாதேஷ் தூதரகங்களின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை முன்வைத்து, டாக்கா இந்தியத் தூதரை பங்களாதேஷ் அரசு வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக புதுடில்லியில் பங்களாதேஷுக்கான விசா சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையிலான தூதரக மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பிராந்திய அளவில் மத நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்த விவாதங்களையும் மீண்டும் முன்வைத்துள்ளது.