ஷெஃபீல்டில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே இரவு நேர கேளிக்கையில் ஈடுபட்டிருந்த 30 வயதான ஷானிஸ் ப்ரூக்ஸ் (Shanice Brookes) என்ற பெண், துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மீது பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஷானிஸ் ப்ரூக்ஸ், கடந்த திங்கட்கிழமை அதிகாலை 02:45 மணியளவில் வெஸ்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள ‘ஒன் ஃபோர் ஒன்’ (One Four One) என்ற மதுபான விடுதிக்கு வெளியே படுகாயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலின் போது, அவர் ஒரு அப்பாவி பார்வையாளர் (innocent bystander) என்று தெற்கு யார்க்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
30 வயதான ஜெமேல் ரோன் (Jemele Rhone) மீது கொலைக் குற்றம், துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய சொத்துகளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
32 வயதான டெரியன் டைஸ் (Deiryen Dyce) மீது குற்றவாளிக்கு உதவியது, வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஷெஃபீல்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். முன்னதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 வயது நபர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு சிறுவனின் தாயான ஷானிஸ் ப்ரூக்ஸ், பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே ‘Zest’ என்ற உள்ளூர் தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராகவும் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
அவரைப் பற்றி அவரது குடும்பத்தினர் கூறுகையில், “அவர் தனித்துவமானவர், பெரிய இதயம் கொண்டவர் மற்றும் எவராலும் மறக்க முடியாத ஆற்றல் மிக்கவர்” என உருக்கமாகத் தெரிவித்தனர்.
மரியாதை நிமித்தமாகவும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது அஞ்சலியைச் செலுத்துவதற்காகவும், துப்பாக்கிச் சூடு நடந்த ‘ஒன் ஃபோர் ஒன்’ பார், இன்று வெள்ளிக்கிழமை (29) மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
