இலங்கைக்கு 773,000 டொலர் பெறுமதியான (சுமார் ரூ. 28 கோடி) மருத்துவ உதவியை ,உலகின் முன்னணி இலாப நோக்கற்ற, மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கும் அரச சார்பற்ற நிறுவனமான Americares, கையளித்துள்ளது.
இது தொடர்பில், அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள Americares தூதரகம் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் கீழ், உலகின் முன்னணி இலாப நோக்கற்ற மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான Americares, 773,000 USD இற்கு அதிகமான மருத்துவ உதவிகளைள நன்கொடையாக அளித்துள்ளது.
இதன் பெறுமதி இலங்கை ரூபாவில் சுமார் 28 கோடியாகும் (ரூ. 279,476,100.28).
இந்த நன்கொடையானது இலங்கை மக்களுக்கு அவசரமாகத் தேவையாக உள்ள, மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பாலூட்டல் விட்டமின்கள், நாட்பட்ட நோய்களுக்கான மருந்துகள், இன்ட்ராவாஸ்குலர் வடிகுழாய்கள், சிரிஞ்கள், கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள எளிதாக்கவும், எதிர்கால நன்கொடைகளை பெறுவதற்கு உதவும் வகையிலும் இலங்கையின் சுகாதார அமைச்சுக்கும் Americares நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் தூதுவர் மஹிந்த சமரசிங்க மற்றும் Americares நிறுவனத்தின் பிரதி மருத்துவ அதிகாரி சாதனா ராஜமூர்த்தி ஆகியோருக்கிடையில் வொஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வ சான்றிதழ் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.