Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசுக்கு எதிராகக் களமிறங்குவர் முப்படையினர்! – சாணக்கியன் எச்சரிக்கை

அரசுக்கு எதிராகக் களமிறங்குவர் முப்படையினர்! – சாணக்கியன் எச்சரிக்கை

1 minutes read

வெகுவிரைவில் முப்படையினரும் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இனிப் போராட்டத்தில் ஈடுப்பட்டால் இராணுவத்தைக் கொண்டு போராட்டத்தை அடக்குவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கை சிவில் பிரஜைகள்தான் இராணுவத்திலும், பாதுகாப்புத் தரப்பிலும் சேவையாற்றுகின்றார்கள் என்பதை ஜனாதிபதி தெரிந்துகொள்ள வேண்டும்.

இராணுவத்தினரும் பொருளாதாரப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும். இராணுவத்தைக் கொண்டு போராட்டத்தை அடக்க வேண்டுமாயின் ஜனாதிபதி இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இராணுவத்தை வரவழைக்க நேரிடும். இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள்

வெகுவிரைவில் முப்படையினரும் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆகவே, போராட்டத்தை முடக்குவது குறித்து அவதானம் செலுத்துவதை விடுத்து பொருளாதாரப் பாதிப்புக்குத் தீர்வு காண அவதானம் செலுத்துங்கள். அதற்குக் கட்சி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நாட்டை மாத்திரமல்ல, இராணுவத்தையும் இல்லாதொழித்துச் சென்றுள்ளார் என்று இராணுவத்தினரே குறிப்பிடுகின்றார்கள்.

கால்வாய் சுத்தப்படுத்துவதற்கும், கட்டடம் அமைப்பதற்கும், வீதி நிர்மாணிப்புக்கும் இராணுவத்தைக் கோட்டபய ராஜபக்ச பயன்படுத்தினார்.

அமுதா கத என்ற விசேட படையணியை உருவாக்கி 40 ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டு தனது இராணுவ நிலைப்பாட்டை அவர் மேம்படுத்தினார்.

இதன்பிறகு விவசாயத்துறை தொடர்பில் படையணியை ஸ்தாபித்து விவசாயத்தையும் முழுமையாக இல்லாதொழித்தார்.

நான் இராணுவத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை. இன்று இராணுவத்துக்காக வரிந்துகொள்பவர்கள் இராணுவத்தின் சம்பளம் தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் இராணுவத்தினரது சம்பள அதிகரிப்புக்காக 20 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகிய எமக்கு இது தொடர்பில் ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்களால் நாடு சீரழிந்துள்ளது. இருப்பதையும் சீரழிக்க வந்துள்ளார்கள். இராணுவத்தினரை விற்றுப் பிழைத்து அரசியல் செய்யும் தரப்பினர் இராணுவத்தினரது சம்பளம் பற்றி கருத்துரைக்கவில்லை” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More