“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்து தேசிய பாதுகாப்புச் சட்டமூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்” – என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது காலம் காலமாக காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்காது என்பதால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்து அதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின்புள்ளே, ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்திர திஸ்ஸ ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்தில் தேசிய பாதுகாப்பு சட்டமூல உருவாக்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புச் சட்டமூலத்தை எதிர்வரும் 31ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்யுமாறு நாடளாவிய ரீதியில் எதிர்ப்புக்கள் நாளாந்தம் வலுப்பெற்ற நிலையில் உள்ளன” – என்றார்.