கட்டம் கட்டமாக நிதியை வழங்கி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அரச அச்சகத்தின் செலவு 400 அல்லது 500 மில்லியன் ரூபாவாகும். அதற்கான முற்பணம் மாத்திரமே தேர்தலுக்கு முன்னர் செலுத்தப்படும். அவ்வாறே கடந்த காலங்களில் இடம்பெற்றது.
150 மில்லியன் ரூபா முற்பணம் செலுத்தப்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன்.
தேர்தலுக்காக முழுமையாக செலவிடப்படும் தொகை 10 அல்லது 8 பில்லியன் ரூபாவாகும். அது ஒரே தடவையில் கோரப்படாது.
தேர்தலுக்கு முன்னதாக இரண்டரை அல்லது 3 பில்லியனே தேவைப்படும்.
அந்தத் தொகையை படிபடிப்படியாக செலுத்த முடியும்.
தேர்தலுக்கான நிதியில் நூற்றுக்கு 60 வீதம் தேர்தலுக்கு பின்னரே தேவைப்படும்.
அவ்வாறெனில், 3 பில்லியன் ரூபா கிடைத்தால் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அவ்வாறு இல்லாது விட்டால் சட்ட திட்டத்திற்கு அமைய, தேர்தல் ஆணைக்குழுவுக்கு, குறுகிய காலத்துக்குத் தேர்தலைப் பிற்போட நேரிடும்.
இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுவதால் மின் கட்டணச் செலவும் குறைவாகும்.
அரச உத்தியோகாத்தர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்தும்போது அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிதண்ணீர் போன்றவற்றை எடுத்துவருமாறு கோரி செலவை மட்டுப்படுத்த முடியும்.
ஆகவே, எல்லோருடைய ஆதரவுடனும் இந்தத் தேர்தலை நடத்த முடியும்” – என்றார்.