September 28, 2023 9:25 pm

சமூகப் பிரதிநிதிகளைத் தடுத்து வைத்து பேரினவாதிகள் அடாவடித்தனம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனைப் பிரதேசத்திலுள்ள பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது குறித்தும், காணி அபகரிப்பு பற்றியும் நேரில் ஆராய்வதற்கு நேற்று சென்ற மதத் தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேரை பௌத்த தேரர் தலைமையிலான காணி அபகரிப்புக் குழுவினர் 6 மணித்தியாலங்களாக வழிமறித்துத் தடுத்து வைத்திருந்தனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களைப் பொலிஸாரே மீட்டு வந்தனர்.

நேற்றுக் காலை மயிலத்தமடு – மாதவனை பிரதேசத்துக்கு வாகனங்களில் இரண்டு அருட்தந்தையர்கள், ஒரு மெனளவி, இரண்டு இந்துக் குருக்கள், 3 ஊடகவியலாள்கள் உட்பட 18 பேர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று பண்ணையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிவிட்டுப் பிற்பகல் ஒரு மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கம்பி பாலத்துக்கு அருகாமையில் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்த மதத் தலைவர்களின் வாகனங்களைத் தேரர் ஒருவர் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்வர்கள் ஒன்றிணைந்து வீதித் தடையைப் போட்டு வாகனங்களைத் தடுத்து நிறுத்தி வாகனங்களின் திறப்புக்களைப் பிடுங்கி எடுத்து அவர்களைத் தடுத்து வைத்ததுடன் இந்து குருக்கள் ஒருவரைத் தாக்க முற்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தையடுத்து கரடியனாறு மற்றும் அரங்கலாவ பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கொண்ட பொலிஸ் குழுவினர் அந்தப் பகுதிக்குச் சென்று பௌத்த தேரர் தலைமையிலான குழுவினருடன் பேச்சில் ஈடுபட்டனர். இதன்போது ஊடகவியலாளர்களின் கமராவில் பதிவு செய்த காட்சிகள் அனைத்தையும் பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் அச்சுறுத்தி அழித்தனர். அத்துடன் இந்தச் செய்தியை ஊடகங்களில் பிரசுரிக்கக் கூடாது எனக் கடிதம் ஒன்றையும் அவர்கள் வற்புறுத்திப் பெற்றனர்.

தொடர்ந்தும் பௌத்த தேரர் தலைமையிலான குழுவினருடன் பொலிஸார் பேச்சில் ஈடுபட்டனர். 6 மணித்தியால தடுத்துவைப்பின் பின்னர் 18 பேரையும் பொலிஸார் அங்கிருந்து மீட்டு வந்தனர்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்