கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டனர்.
அவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 மற்றும் 39 வயதுடைய மேற்படி இரண்டு சந்தேகநபர்களும் கடந்த வருடம் ஜனவரி 30ஆம் திகதி, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் காணப்பட்ட கொள்கலனில் மறைந்து மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்தனர்.
ஆனால், அந்தக் கப்பல் மலேசியாவுக்கு வந்தபோது, கொள்கலனில் மறைந்திருந்த இரண்டு சந்தேகநபர்களையும் மலேசியா ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அதிகாரிகள் சந்தேகநபர்களை ஏற்றிக்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று இறுதியாக சீனாவுக்குச் சென்றனர்.
இதையடுத்து சீன அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.
இந்தநிலையில், சந்தேகநபர்கள் இருவரையும் சீனாவில் இருந்து இலங்கைக்குக் கடத்த நடவடிக்கை எடுத்த பின்னர், இன்று (24) அதிகாலை 5 மணியளவில், சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க விமான நிலையக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் அவர்களைக் கைது செய்து கொழும்பு – கிருலப்பனை பகுதியில் உள்ள பிரதான அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.