மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள பகுதியில் கொக்கைன் வகை போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 1 கிலோ 12 கிராம் கொக்கைன் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம்
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ். சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே ஆலோசனையின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் ஜே.ரி.யூ.ஜெயவர்தன தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே தாழ்வுபாடு பகுதியைச் சேர்ந்த 34 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளுடன் ஆஜர்படுத்தவுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கெக்கைனின் தற்போதைய சந்தை மதிப்பு மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.