Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் புற்றுநோய் எந்த வயதில் கவனம் தேவை

புற்றுநோய் எந்த வயதில் கவனம் தேவை

4 minutes read

புற்றுநோய் பற்றி மக்கள் இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை. எடுத்துக்காட்டாக, புற்றுநோய் என்பது ஒரே ஒரு நோய் என்றுதான் நினைக்கிறார்கள். புற்றுநோயில் சுமார் 200 வகைகள் உண்டு. புற்றுநோய் என்பது எந்த வயதிலும் வரலாம். ஆனால், முதுமையில் புற்றுநோய் வரச் சாத்தியம் அதிகம். இந்தியாவில் முதியவர்கள் இறப்பதற்கு ஐந்தில் ஒரு காரணம் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டுள்ளது.

காரணங்கள்

முதுமையே ஒரு முக்கிய காரணம்

அதிக நாள்கள் வாழ்வதால், புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் தொடர்ந்து உடலைத் தாக்கிக்கொண்டிருக்கும் நிலை. எடுத்துக்காட்டு: மாசு படிந்த சுற்றுச்சூழல், ரசாயனம் கலந்த திரவத்துடன் தொடர்ந்து தொடர்புகொள்வது, புகைபிடிப்பது

நீண்ட நாள் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குக் கல்லீரல் புற்றுநோய் வரச் சாத்தியமுள்ளது

புகையிலை மெல்லுபவர்களுக்கு வாய், நாக்கில் புற்றுநோய் வரச் சாத்தியமுள்ளது

செல்கள் சரிவர இயங்காததால் ஏற்படும் விளைவுகள்

புற்றுநோய் உண்டாக்கும் மரபணுக்களை அதிகப்படுத்துவது

புற்றுநோயைத் தடுக்கும் மரபணுக்கள் குறைதல்

அதிகம் காணப் படும் புற்றுநோய்கள்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு புற்றுநோய், மிக அதிக அளவில் தாக்கியிருக்கும். ஆப்பிரிக்கக் கண்டத்தில் கல்லீரல் புற்றுநோய் அதிகம். இந்தியாவில் வாய்ப் புற்றுநோயும், இங்கிலாந்தில் நுரையீரல் – மார்புப் புற்று நோயும் அதிகம். ஜப்பானில் வயிற்றுப் புற்றுநோய் அதிகம்.

கழுத்து – தலையில் ஏற்படும் புற்றுநோய், பெண்களின் பிறப்புறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய், சிறு குடல், பெருங்குடல், புராஸ்டேட், மார்பகம் – ரத்தம் சார்ந்த புற்றுநோய்கள் 50 வயதுக்கு மேல் அதிகம் தாக்கச் சாத்தியம் உண்டு. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு சார்ந்த புற்றுநோய்களும், பெண்களுக்கு மார்பகம் – கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும் அதிகம் தாக்குகின்றன.

வருமுன் காக்க…

ஆண்களுக்கு: 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை, தொல்லைகள் இல்லாத நிலையிலும்கூட செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் தொடக்க நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து தக்க சிகிச்சை எடுத்தால், நோய் குணமடையச் சாத்தியம் அதிகம். அது மட்டுமல்லாமல் பக்கவிளைவு கள் குறைந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.

புராஸ்டேட் புற்றுநோயைக் கண்டறிய ஆண்டுக்கு ஒருமுறை பி.எஸ்.ஏ. ரத்தப் பரிசோதனையும், சோனோ கிராம் பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய, முக்கியமாகப் புகைப்பிடிப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது சளிப் பரிசோதனை – மார்பு எக்ஸ்ரே எடுத்துக்கொள்ள வேண்டும்.

குடல் புற்றுநோய்க்கு ஆண்டுக்கு ஒரு முறை மலப் பரிசோதனை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நுண்குழாயை ஆசனவாயில் செலுத்தும் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

பெண்களுக்கு

மார்பகம் – 40 வயதைக் கடந்த ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மார்பகத்தில் கட்டி ஏதேனும் உள்ளதா என்பதை சுயமாகப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால், மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மமோகிராம் என்கிற பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது (முக்கியமாகக் குடும்பத்தில் யாருக்காவது மார்பகக் கட்டி வந்திருந்தால்). மார்பகப் புற்றுநோய் தொடக்க நிலையில் கண்டறியப்பட்டால் அறுவைசிகிச்சை மட்டும் போதுமானது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்: இந்த நோயைத் தொடக்க நிலையில் கண்டறிய பாப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை உதவுகிறது. 35 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் இப்பரிசோதனையை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்வது அவசியம். இதன்மூலம் கர்ப்பப்பை வாயில் கிருமித்தொற்று, புற்றுநோய் அல்லது புற்றுநோயாக மாறக்கூடிய நோய்கள் போன்றவற்றைக் கண்டறிய முடியும். சந்தேகத்துக்குரிய விதத்தில் பரிசோதனை முடிவுகள் இருப்பின் பயாப்சி போன்ற பரிசோதனை செய்யப்படும்.

சினைப்பைப் புற்றுநோய்க்கு ஆண்டுக்கு ஒரு முறை ஸ்கேன் (CA125) ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது.

பரிசோதனைகள்

ஒருவருக்குப் புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகப்பட்டால், முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். எந்த இடத்தில் புற்றுநோய் (எடுத்துக்காட்டு: மார்பு, கழுத்து, தோல், எலும்பு), எந்த நிலையில் உள்ளது, தொடக்க நிலையிலா அல்லது முற்றிய நிலையிலா, புற்றுநோய் வேறு எங்காவது பரவியுள்ளதா என்பது கண்டறியப்படும்.

பின்பு ரத்தப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே – சி.டி., எம்.ஆர்.ஒ., பெட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டியிருக்கும். புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அதை உறுதிசெய்ய அக்கட்டிக்குள் சிறு ஊசியைச் செலுத்தி, அதன் மூலம் கட்டியிலிருந்து சிறிது திசு பரிசோதனைக்கு எடுக்கப்படும் (FNAC) . தேவைப்பட்டால் கட்டியைச் சிறிய அளவுக்கு அறுவை செய்து எடுத்து (Biopsy) பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

சிகிச்சை முறைகள்

புற்றுநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அதற்குத் தக்க சிகிச்சை அளித்து, பின்பு தொல்லை ஏதுமின்றி 5 ஆண்டுகள் கடந்துவிட்டால், ஒருவர் புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டதாகக் கருதலாம்.

புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ள நடுத்தர வயதிலிருந்தே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை அறவே ஒழித்து, காய்கறி, பழங்கள் – நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை உண்டு, தேவையான உடற்பயிற்சியும் செய்துவந்தால், புற்றுநோய் நெருங்காது! இப்படி இருந்தும் உடலில் ஏதேனும் திடீர் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவரிடம் உடனே சென்று தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டால், புற்றுநோயிலிருந்து விடுபட்டு நலமாக வாழலாம்!

– கட்டுரையாளர், பிரபல முதியோர் நல மருத்துவர்

நன்றி : இந்து தமிழ் திசை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More