“திருடர்களையும் கொலைகாரர்களையும் சேர்த்துக்கொண்டு எப்படி நாட்டைக் கட்டியெழுப்புவது? இவர்களை விரட்டிவிட்டுத்தான் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எனவே, இவர்களை விரட்டியடிக்க முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்.”
– இவ்வாறு ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உண்மையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து இந்த அரசை விரட்ட வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் தேவை. அப்படிப் பார்க்கும்போது மக்களுக்குத் தேவை நாடாளுமன்றத் தேர்தல்தான். அதையே நாங்களும் கேட்கின்றோம்.
எதிர்க்கட்சியில் உள்ள சிலர் நாடாளுமன்றத் தேர்தலை விரும்பவில்லை. அரசில் இருந்து எதிர்க்கட்சி பக்கம் பாய்ந்து சுயாதீன எம்.பிக்கள் என்று கூறிக்கொண்டு இருப்பவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை விரும்பவில்லை. அவர்கள் தோல்வியடைந்துவிடுவார்கள் என அஞ்சுகின்றார்கள்.
ஜனாதிபதி நினைத்தால் அடுத்த வருடம் பெப்ரவரியின் பின் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம். ஆனால், அரசு இப்போதைக்கு எந்தத் தேர்தலுக்கும் செல்லாது” – என்றார்.