அரசுக்கு எதிராகக் கொழும்பில் நேற்று தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் சாவடைந்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேச சபைக்கான, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரே இவ்வாறு மரணித்துள்ளார்.
61 வயதுடைய நிமல் அமரசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த வேட்பாளர் உள்ளிட்ட 28 பேர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.