Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் தொடரும் முகமூடிக் கொள்ளையர்களின் கைவரிசை!

யாழில் தொடரும் முகமூடிக் கொள்ளையர்களின் கைவரிசை!

1 minutes read

யாழ்ப்பாணம், சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றினுள் வீட்டின் ஓட்டைக் கழட்டி உட்புகுந்த முகமூடிக் கொள்ளைக் கும்பல் கத்தி முனையில் 20 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

சங்கிலியன் வீதியில் உள்ள குறித்த வீட்டினுள் நேற்று நள்ளிரவு கூரையைப் பிரித்து உள்நுழைந்த மூவர் அடங்கிய கொள்ளைக் கும்பல் வீட்டில் இருந்தவர்களைக் கட்டி வைத்து கத்தி முனையில் வீட்டில் இருந்த 20 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளரான கணவனும் மனைவியும் உடுவில் பிரதேச செயலகம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களாவர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களில் சுமார் ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டப் பகுதிகளில் மூவர் அடங்கிய முகமூடி கொள்ளைக் கும்பல் இரு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதுடன் ஓர் இடத்தில் கொள்ளையைக் கைவிட்டுத் தப்பியோடியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கல்வியங்காடு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் புகுந்த மூவர் அடங்கிய கொள்ளைக் கும்பல் அருட்தந்தையைக் கத்தி முனையில் மிரட்டி, அவரின் 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருநெல்வேலி பாற்பண்ணைப் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையைப் பிரித்து உள்நுழைந்த மூவர் அடங்கிய முகமூடி கொள்ளைக் கும்பல் வீட்டில் இருந்தவர்களைக் கட்டி வைத்து, கத்தி முனையில் கொள்ளையிட முயன்றபோது வீட்டார் கூக்குரல் எழுப்பவே அயலவர்கள் விழித்துக்கொண்டு தமது வீட்டு மின் விளக்குகளை ஒளிர விட்டதையடுத்து கொள்ளைக் கும்பல் தமது கொள்ளை முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றினுள் கூரையைப் பிரித்து உள்நுழைந்த மூவர் அடங்கிய முகமூடிக் கொள்ளைக் கும்பல் 20 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்துக்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவானோர் வருகை தந்து தங்கி நின்று நல்லூர் ஆலயத்துக்குச் சென்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் முகமூடிக் கொள்ளையர்களின் கொள்ளைச் சம்பவம் அதிகரித்துள்ளமை அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More