“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறும். எமது கட்சிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. கட்சியை எவரும் பிளவுபடுத்த முடியாது.”
– இவ்வாறு சூளுரைத்தார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கட்சியின் 72 ஆவது மாநாட்டால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் எனவும், கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறித்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் எனவும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் சர்ச்சைக்குரிய உறுப்பினர்கள் அனைவரும் நேற்று ஒரே மேடையில் காட்சியளித்தனர்.
அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது எனவும் அவர்கள் சூளுரைத்தனர்.
இந்த மாநாட்டைக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் தொகுதியான குருநாகலையில் நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், ஆளுங்கட்சி பக்கம் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையின் பிரகாரம் கொழும்பில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இதனால் தயாசிறி ஜயசேகரவும், அவர்களின் சகாக்களும் மாநாட்டில் பங்கேற்கமாட்டார்கள் எனவும் கூறப்பட்டது. தயாசிறி ஜயசேகரவின் பொதுச்செயலாளர் பதவிகூட பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அமைச்சர்களாக உள்ள சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ள லசந்த அழகியவண்ண உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் சந்திரிகா அம்மையார் பங்கேற்கவில்லை. அவரின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உட்பட ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.