Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெடுக்குநாறிமலையில் கைதானவர்களை விடுவித்தே ஆக வேண்டும்! – கஜேந்திரன் (நேர்கண்டவர்:- தமிழ்மாறன்)

வெடுக்குநாறிமலையில் கைதானவர்களை விடுவித்தே ஆக வேண்டும்! – கஜேந்திரன் (நேர்கண்டவர்:- தமிழ்மாறன்)

1 minutes read

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூசகர் உள்ளிட்ட 8 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ‘வணக்கம் இலண்டனிடம்’ தெரிவித்தார்.

பூசகர் உள்ளிட்ட 8 பேர் மீதும் நெடுங்கேணிப் பொலிஸார் பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வழக்குத் தொடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்பாவிகளான 8 பேரும் தொல்பொருள் சின்னங்களைச் சேதப்படுத்தவில்லை என்றும், அவர்கள் மீது தொல்பொருள் திணைக்களத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றும் கஜேந்திரன் எம்.பி. கூறினார்.

மேற்படி 8 பேரும் விடுவிக்கப்படாவிட்டால் நீதி கோரி தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னணி

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆலயத்துக்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

அவர்களைக் கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தால் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல்பொருள் சின்னங்களைச் சந்தேகநபர்கள் சேதப்படுத்தினர் என்று மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து மேற்படி சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பில் ஜனாபதிதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான என்.ஸ்ரீகாந்தா, க.சுகாஷ், தி.திருஅருள், கிறிஸ்ரினா, ஜிதர்சன், சஜித்தா, சாருகேசி, விதுசினி, கீர்த்தனன், யூஜின் ஆனந்தராஜா, கொன்சியஸ் உள்ளிட்ட பலர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More