“இந்தியா சென்ற என்னைக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் தடுத்து நிறுத்தியமைக்குப் பின்னால் பெரும் சதியுள்ளது. அது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனிடம் விசாரணை நடத்த வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின்போதே இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழில் தனியார் ஊடக நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்
எனவே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை விசாரித்தால் அது எந்தப் பத்திரிகை எனத் தெரியவரும். அந்த ஊடகத்தின் முதலாளியை விசாரிக்கும்போது இதன் உண்மைத்தன்மை கண்டறியப்படும்.
சுமந்திரனை நான் சென்னையில் கண்டபோதும் அவர் என்னிடம் இது பற்றி எதுவும் கேட்கவில்லை.
எனவே, இவ்வாறு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது எனக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகின்றேன்.
நீங்கள் சுமந்திரனை விசாரித்தால் இதற்குரிய உண்மையைக் கண்டறிய முடியும்.” – என்றார்.