Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 39 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 39 | பத்மநாபன் மகாலிங்கம்

17 minutes read

விவசாயிகளைத் தவிர ஏனையவர்கள் எருதுகள் பற்றிய பல உண்மைகளை அறிய மாட்டார்கள். எருதுகளை வளர்ப்பதில் பல்வேறு படிமுறைகள் உண்டு. பசு ஒன்று கன்று ஈன்றதும் ஆண் கன்றுகளை நாம்பன்கள் என்றும், பெண் கன்றுகளை நாகுகள் என்றும் அழைப்பார்கள். நாம்பன்கள் பால்குடியை மறந்து சற்று பெரிதாக வளரும் வரை காத்து இருப்பார்கள். வளர்ந்த பிறகு நாம்பனின் உடற் பலம், கால்களின் உறுதி முதலியவற்றைப் பார்த்து பொருத்தமான நாம்பனை தெரிவு செய்வார்கள். பின்னர் அதனுடன் சோடி சேர்க்க பொருத்தமான இன்னொரு நாம்பனை ஏனையவர்களின் பட்டிகளிலிருந்து தெரிவு செய்து இரண்டையும் நுகத்தில் மட்டும் பூட்டி ஓட பழக்குவார்கள்.

ஓடப் பழக்கிய பின்னர் கலப்பையில் பூட்டி உழவு பழக்குவார்கள். நன்கு பழகிய எருதுகள் முன்னால் உழுது கொண்டு போக, நாம்பன்கள் பின்னால் உழுது கொண்டு போகும். உழவு பழகிய பின்னர் வண்டிலில் பூட்டி ஓடப் பழக்குவார்கள். வண்டிலில் நன்கு ஓட பழகிய பின்னர் நாம்பன்களுக்கு குறி சுடப்படும். குறி சுட்டதும் நாம்பன்களை ‘எருதுகள்’ என்று அழைப்பார்கள். சில எருதுகளை உழவின் போதும், வண்டில் ஓடும் போதும் வலப்பக்கத்தில் பூட்டுவார்கள். மற்றதை இடப் பக்கம் பூட்டுவார்கள். அப்படியே பழகி எருதுகளுக்கிடையே ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடும். அதனால் அவை ஒருங்கிணைந்து செயற்பட ஆரம்பிக்கும்.

எருதுகள் ஒருங்கிணைந்து செயற்பட ஆரம்பித்த பின்னர் வலப்பக்கம் பூட்டும் எருதை வண்டிலின் இடப்பக்கம் பூட்டி, மற்றதை வலப்பக்கம் பூட்டினால் அவை வண்டிலை இழுக்காமல் குழப்படி செய்யும். தற்செயலாக சோடியாக பழகிய எருதுகளில் ஒன்று இறந்து விட்டால், வேறு எருது ஒன்றைக் கொண்டு வந்து தப்பிய எருதுடன் பூட்டி இயங்க செய்வது கஷ்டம். மினக்கெட்டு பழக்கினாலும் அவற்றிற்கிடையே தொடக்கத்தில் இருந்து ஒன்றாக பழகிய எருதுகளுக்கு இருந்த   மாதிரியான பிணைப்பு ஏற்படாது.

மகாலிங்கம் செருக்கன், குஞ்சுப் பரந்தன், உருத்திரபுரம் பத்தாம் வாய்க்கால், எட்டாம் வாய்க்கால் என்று தனது நிர்வாக எல்லைக்குள் உள்ள இடங்களுக்கு எல்லாம் சென்று, மக்களுக்கு ஆறுதல் கூறி, வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேத விபரத்தை சேகரித்து காரியாதிகாரி கந்தோரில் சமர்ப்பித்தார்.

வடக்கு காட்டிற்குள் சென்றவர்கள் கண்ட துன்பகரமான காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஆங்காங்கே எருமைகள், பசுக்கள், ஆடுகள் செத்து வயிறூதி காணப்பட்டன. வெள்ளத்தால் காட்டு மிருகங்களும் இறந்திருந்தன. தப்பிப் பிழைத்த நரிகளும் பன்றிகளும் இறந்த விலங்குகளின் ஊனை உண்டு கொண்டிருந்தன. நாற்றம் தாங்க முடியாதிருந்தது.

காகங்கள் உயர சுற்றிச் சுற்றி பறந்தால் நிச்சயமாக அந்த இடத்தில் ஒரு விலங்கின் உடல் இருக்கும் என்று கணபதியார் தலைமையில் காட்டினுள் சென்றவர்கள் புரிந்து கொண்டார்கள். காகங்களும் இறந்த விலங்குகளின் உடலை கொத்தி கொத்தி பசியாறின.

ஏதாவது வளர்ப்பு விலங்கு தப்பியிருக்குமா என்று தேடிச் சென்றவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்கும் வகையில் காட்டின் மேடான பகுதியில் சில எருமைகளும், பசுக்களும், ஆடுகளும் மேய்ந்து கொண்டிருப்பதையும் கண்டார்கள்.

அவற்றை ஊரை நோக்கி விரட்டி விட்டு, தொடர்ந்து காட்டினுள் நடந்தார்கள். அவர்கள் சுட்டதீவின் அருகே இருந்த தீவை நோக்கியே சென்று கொண்டிருந்தார்கள்.

தீவு என்று பெரிய பரந்தன் மக்களால் அழைக்கப்பட்ட பகுதி கடலால் சூழப்பட்ட வழக்கமான தீவு அல்ல. ஆறு ஏக்கர் வரையான ஒரு மேடான காணி காட்டின் எல்லையில் காணப்பட்டது. அந்த மேட்டை சுற்றி நாலாபுறமும் பள்ளமாக இருந்தது. ஒரு இடத்தில் மட்டும் பாதை போன்ற ஒரு பகுதி காட்டின் ஏனைய பகுதியுடன் தொடர்பு பட்டிருந்தது.

மாரி காலத்தில் மழை பெய்ய, சுற்றிவர இருந்த பள்ளங்கள் நிரம்பி விடும்.  அந்த காணியைப் பார்க்க அது ஒரு தீவு போன்று காணப்படும். பாதை போன்ற பகுதி தொடக்கத்தில்   மழைக்கு தண்ணீரால் நிரம்பாது, கடும் மழை பெய்ய அதுவும் நிரம்பி காணி முழுமையான தீவாக மாறி விடும். அந்த தீவின் மையப்பகுதி மேடாக இருந்தது.  அங்கு பாலை, வேம்பு, விளாத்தி, நாவல், மருது போன்ற பெருமரங்களும், மரங்களைச் சுற்றி பரந்த புல் வெளியும் காணப்பட்டது.

கால போக காலத்தில் மக்கள் தமது வீட்டு விலங்குகளில் கட்டி மேய்ப்பவை தவிர்ந்த ஏனையவற்றை முதல் மழையுடன் தீவில் கொண்டு போய் விடுவார்கள். பெரு மழை பெய்ய, பாதையும் நீரில் மூழ்கி விட, தீவில் விடப்பட்ட விலங்குகள் வெளியில் வராது அங்கேயே தங்கி விடும்.

மழை நேரத்தில் மரங்களின் கீழ் போய் நின்று விடும். மழையில்லாத போது பரந்த வெளியில் மேயும். தீவில் எல்லோருமாக இரண்டு மூன்று சிறிய கொட்டில்கள் போட்டிருப்பார்கள். பசுக்கன்றுகளை நரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகவும், காலையில் எழுந்து பால் கறந்துகொண்டு வருவதற்காகவும் சிலர் அந்த கொட்டில்களில் போய் தங்குவதுண்டு.

விலங்குகளைக் தேடிச் சென்றவர்கள் கடைசியாக தீவை நெருங்கினார்கள். அவர்கள் அனுபவசாலிகள் என்றபடியால் காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையில் இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி தீவுக்குள் நுழைந்தார்கள். தூரத்திலேயே சில எருமைகளையும் பசுக்களையும் கண்டார்கள்.

இன்னும் உள்ளே செல்ல ஆடுகள், பசுக்கள், எருமைகளுடன் மான்களும் பன்றிகளும் நின்று மேய்வதையும் கண்டார்கள்.

நல்லையர் முன்னே சென்றவர் பயந்து திரும்பி ஓடி வந்தார். “என்ன நல்லையா ஏன் ஓடி வாறாய்?” என்று கணபதியார் கேட்க, நல்லையர் “அண்ணை, ஒரு கூட்டம் யானைகளும் நின்று மேயினம்.” என்று பதிலளித்தார். கணபதியார் “இனி இஞ்சை நிப்பது புத்தியில்லை, மாடுகளும் எருமைகளும் ஆடுகளும் பாதுகாப்பாய் நிக்கினம். நாங்கள் வந்த வழியாலை திரும்பிப் போவம்”என்றார்.

உயரமான தோற்றமுள்ள பேரம்பலத்தார் சுத்தி சுத்திப் பார்த்து விட்டு “அண்ணை, நாங்கள் பயந்த மாதிரி எல்லாம் சாகேல்லை, மூண்டிலொரு பங்கு மிருகங்கள் இஞ்சை வந்து தப்பி நிக்குதுகள்” என்று சொல்லும் போதே அவர் குரலில் சிறிது ஆறுதல் தென்பட்டது.

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல வயலில் இருந்த நெற்பயிர்களில் வெள்ளம் அள்ளிக் கொண்டு போனதை விட, தப்பியவற்றையாவது காப்பாற்றலாம் என்று எண்ணியிருந்த மக்கள், கடல் நீர் வந்ததால் நெற்பயிர்கள் யாவும் கருகி போனதைக் கண்டு மனம் துவண்டு போயினர். உயரமான வீடுகளில் வாழ்ந்த ஒரு சிலரின் நெல்மணிகளும், உயரமான கோற்காலிகளில் வைத்திருந்த சிலரின் நெல்மணிகளும் மட்டும் வெள்ளத்தில் அள்ளுண்டு போகாது தப்பின. சிலருக்கு எதுவுமே தப்பவில்லை, சுயமான, நிறைவான பொருளாதாரத்துடன் வாழ்ந்த மக்கள் செய்வதறியாது திகைத்து போயினர்.

கணபதியார் ஒரு நாளும் தனக்கு இந்த சாப்பாடு தான் விருப்பம் என்று மீனாட்சியை கட்டாயப்படுத்தியதில்லை. எதைக் கொடுத்தாலும் மறுக்காமல் சாப்பிடுவார்.  அவருக்கு காலையில் பழம் கஞ்சியும் மதியமும் இரவும் சுடச்சுட சோறும் சாப்பிட விருப்பம் என்று மீனாட்சிக்குத் தெரியும்.

இரவுச் சாப்பாட்டுக்கென்று சுளகில் அரிசியை எடுத்து புடைக்கும் போது “நாங்கள் மூண்டு நேரமும் சாப்பிடுறம், சில சனம் இந்த வெள்ள அழிவுக்கு பிறகு ஒரு நேரச்சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகுதுகள்” என்று நினைத்தபடி மீனாட்சி சுளகில் இருந்த அரிசியில் தப்பியிருந்த நெல்லை பொறுக்கும் போது, சின்னப்பிள்ளை (மீனாட்சியின் மைத்துனி – கந்தையரின் மனைவி) வேறு சில பெண்களுடன் மீனாட்சியிடம் வந்தா.

மீனாட்சி அவர்களைப் பார்த்து “என்ன எல்லாருமாய் வந்திருக்கிறியள்.” என்று கேட்டா. சின்னப்பிள்ளை “மச்சாள், இந்த முறை கால போக நெற்பயிர்கள் முழுதும் அழிந்து போச்சுது. கொஞ்சப் பேரிட்டை மட்டும் நெல் தப்பியிருக்குது. அவை இல்லாதவைக்கு கொடுக்கிறதாலை பிள்ளையளுக்கு சோறும் சம்பலும் எண்டாலும் கொடுக்க கூடியதாய் இருக்கு. எவ்வளவு நாளைக்கு அவையும் கொடுப்பினம்.  இனி எங்களுக்கு என்ன கதி எண்டு இவையள் கேட்கினம். அது தான் நான் இஞ்சை கூட்டிக் கொண்டு வந்தனான்.” என்று பதிலளித்தா.                                 

மீனாட்சி வந்த பெண்களைத் பார்த்து “இஞ்சை பாருங்கோ, நடந்ததை நினைச்சு கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை. யாழ்ப்பாணத்திலை இருக்கிற என்ரை அக்கா அடிக்கடி “மீனாட்சி, பொய் சொல்லாமல், களவெடுக்காமல் எந்த வேலையையும் செய்து மனுஷர் வாழலாம். வாழ வழியில்லை எண்டு ஒருத்தரும் சொல்லக்கூடாது என்று சொல்லுறவ. நாங்கள் நம்பிக்கையை விடக்கூடாது” என்று சொன்னா.

கொஞ்ச நேரம் யோசித்த மீனாட்சி “இனி ஆம்பிளையள் காணியளை திருத்த முழுமூச்சாய் வேலை செய்யோணும். பொம்பிளையள், நாங்கள் தான் என்னெண்டாலும் செய்ய வேணும்.  நாகலிங்கத்தாற்றை ‘மில்’ வந்தாப்பிறகு நாங்கள் உரலில் குத்துறதை குறைச்சுப்போட்டம். எல்லாரும் மில்லில் குத்தி முத்துப் போலை அரிசி எடுக்கப் பழகீட்டம். நாங்கள் கொஞ்சம் கூடுதலாக நெல்லை அவிச்சு, குத்தி அரிசியை கிளிநொச்சியிலை ஒவ்வொரு சனியும் கூடும் சந்தையிலை கொண்டு போய் வித்தால் என்ன?” என்று கேட்டா.

அதற்கு ஒரு பெண் “மீனாட்சி, நான் ஒருநாளும் சந்தைக்கு போனதில்லை. என்னெண்டு பழக்கமில்லாத இடத்திலை கொண்டு போய் விக்கிறது?” என்று கேட்டா. அதற்கு மீனாட்சி “எல்லாரும் பழகிக்கொண்டே சந்தைக்குப் போயினம். தொடக்கத்தில் ஒரு மாதிரி தான் இருக்கும். பழகப் பழக அது சாதரணமாய் போயிடும்” என்றா.

இன்னொரு பெண் மீனாட்சியைப் பார்த்து “அக்கா, என்னட்டை ஒரு குண்டுமணி அளவு நெல்லும் இல்லை. நான் என்னத்தை அவிக்கிறது.” என்று கேட்டா. அதற்கு மீனாட்சி “பிள்ளை, எங்களிட்டை கொஞ்சம் நெல் இருக்குது. தாறன் அவிச்சுக்குத்தி வித்துப்போட்டு காசை கொஞ்சம் கொஞ்சமாய் தா” என்று பதிலளித்தா.

மற்றவர்களைப் பார்த்து “வல்லிபுரம் அண்ணையின்ரை வீடு உயரமான கல்வீடு. அவர் கோற்காலியிலை தான் நெல்லை வைச்சவர். அதாலை அவற்றை சூடுகள் அள்ளுப்பட்டு போனாலும் நெல்மூட்டைகள் தப்பியிட்டுது. கேட்டால் அவர் கட்டாயம் தருவார். நீங்கள் வாங்கி அவிச்சுக்குத்தி வித்து, பகுதி பகுதியாய் காசைக் கொடுங்கோ” என்று ஆலோசனை சொன்னா.

அடுத்து அரிசியை சந்தைக்கு கொண்டு போகும் வண்டில் பிரச்சினை வந்தது. வண்டில்கள் எல்லாம் சிறு சிறு பாதிப்புகளுடன் தப்பிவிட்டன. சிலரோடை எருதுகள் தப்பிவிட்டன. சிலருக்கு ஒற்றை எருதோ அல்லது இரண்டு எருதுகளுமோ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

மீனாட்சி “ஒரு வண்டிலில் இரண்டு மூன்று பேர் அரிசி ஏத்திக் கொண்டு போகலாம். எருதுகள் தப்பி நிக்கிற ஆக்கள் மற்றவையையும் ஏத்தினால் எல்லாரும் சந்தைக்கு போய் வரலாம். எங்கடை வண்டில்லை மூண்டு பேர் போகலாம்.” என்றா.

அப்பொழுது ஒரு பெண் “மீனாட்சி, அப்ப நீயும் வாறாய் தானே?” என்று கேட்டா. அதற்கு மீனாட்சி “பொறுங்கோ, நான் இவரிட்டை கேக்கிறன். அவர் சம்மதித்தால் நானும் வாறன்.” என்றா.

கணபதியார் வீட்டின் தலைவாசலில் இருந்து பெண்கள் கதைப்பதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். மீனாட்சி போனால் தான் உது சரிவரும் என்று அவருக்குத் தெரியும். மகாலிங்கம் என்ன சொல்வானோ? என்ற தயக்கத்துடன் இருந்தார்.

மீனாட்சி அவரிடம் வந்து “இஞ்சை பாருங்கோ, பொம்பிளையள் அரிசியைக் கொண்டு போய் சந்தையிலை விற்பம் எண்டும், என்னையும் கூட வரச்சொல்லியும் கேக்கிறாளவை. நான் என்ன மறுமொழி சொல்லுறது” என்று கேட்டாள். கணபதியார் “நீ, சமாளிப்பாய் என்றால் போய் வா. எனக்கு தம்பி என்ன சொல்வானோ என்று தான் யோசனையாய் இருக்கு” என்று பதிலளித்தார்.

மகாலிங்கம் வேலை முடிந்து காரில் திரும்பி வரும் போது தகப்பன்ரை வீட்டிலை இருந்து சில பெண்கள் போவதைக் கண்டார். காரைக்கொண்டு வந்து கொட்டிலில் நிற்பாட்டி விட்டு, தலைவாசலுக்குப் போக, உள்ளே மாமியார் தாயுடன் இருப்பதைக் கண்டார். என்னெண்டாலும் அவையே சொல்லட்டும் என்று நினைத்தபடி தகப்பனுடன் கதைத்தார். அப்போது மீனாட்சி “தம்பி, பொம்பிளையள் எல்லாரும் இருக்கிற நெல்லை அவிச்சுக்குத்தி அரிசியைக் கொண்டு போய் சந்தையிலை விக்கப் போயினமாம். என்னையும் வரச்சொல்லி கேக்கினம்” என்றா.

அதற்கு மகாலிங்கம் “அம்மா, உங்களுக்கு ஏன் அந்தக் கஷ்டம். நான் உங்களைப் பார்க்க மாட்டனா?” என்று கரிசனையாக கேட்டார்.  மீனாட்சி “தம்பி, நான் போகாட்டில் உவையள் சமாளிக்க மாட்டினம். ஐயாவிட்டை கேட்டனான், அவரும் சமாளிப்பாய் எண்டால் போவன் என்று சொன்னவர்.” என்று பதிலளித்தா. தகப்பனும் சம்மதித்து விட்டார் என்று தெரிந்ததும் மகாலிங்கம் “என்னெண்டாலும் செய்யுங்கோ.” என்று அரை மனதுடன் சொல்லி விட்டு தங்கள் வீட்டை நோக்கி நடந்தார்.

மீனாட்சி சின்னப்பிள்ளையிடம் “நெல்லை அவிச்சு காய விடுங்கள். வியாழன், வெள்ளி மில்லில் கொடுத்து குத்துவம். வாற சனிக்கிழமை அரிசியை சந்தைக்கு கொண்டு போக வேணும்” என்று சொல்லி அனுப்பினா.

ஆம்பிளையள் கோவில் முன்றலில் கூடி நெல் விதைப்பதைப் பற்றி கதைத்தனர். காலபோகம் பிழைத்து விட்டது. உப்பு நீர் வந்ததால் அடுத்த சிறுபோகத்தையும் செய்ய முடியாது. வயலை திருத்த வேணும் என்பதை எல்லாரும் உணர்ந்திருந்தனர். எல்லாரும் கணபதியார் என்ன சொல்லப் போறார் என்று அவரையே பார்த்தனர்.

கணபதியார் ஒரு முறை செருமிக் கொண்டு “நாங்கள் முதல் கிணறுகளையும் பூவல்களையும் தண்ணீரை இறைத்து துப்பரவாக்க வேணும்.  அதுக்கு பிறகு வயலை திருத்த வேணும்.  என்ன செய்யலாம் எண்டு சொல்லுங்கோ” என்றார். முத்தர்கணபதி “அண்ணை, நாங்கள் பூவரசம் குழைகளை வெட்டி யாழ்ப்பாண தோட்டகாரங்களுக்கு விக்கிறனாங்கள். இந்த முறை அவையளுக்கு விக்காமல் வயல்களில் பரவுவம். இலைகள் காய்ந்து கொட்டிய பிறகு தடிகளை பொறுக்கி எரிக்கலாம்” என்று சொன்னார். கணபதியார் “சரி, அதை செய்வம். வேறை?” என்றார்.

பேரம்பலத்தார் “காட்டிலை கிடக்கிற காய்ந்த சருகுகளை ஏத்தி பரவுவம்” என்றார். நல்லையர் “மில் நாகலிங்கத்தார் நெல்லுக்குத்தி வாற உமியை எரிக்கிறவர். அவரிட்டை கேட்டு வாங்கி வயலுக்குள்ளை பரவி எரிப்பம்” என்று தன்ரை கருத்தை சொன்னார்.

கந்தையர் “கோடைக்கு காட்டிலை இருக்கிற குளங்களெல்லாம் வத்தி, காய்ஞ்சு, பொருக்கு வரும். அந்த பொருக்குகளை ஏத்தி பறிப்பம்” என்றார். கணபதியார் “நீங்கள் சொன்னது எல்லாம் சரி, அப்படியே செய்வம். இனி தப்பி நிக்கிற மாடுகளை காட்டுக்குள்ளை அடைக்க வேண்டாம். காட்டிலை அலம்பல் வெட்டி கொண்டு வந்து நீள்சதுரமாக தட்டிகள் கட்டுவம்.  ஒரு ஆளுக்கு பதினாறு தட்டிகள் வேணும். பதின்னாலு கட்டைகளை வெட்டி ஒரு பக்கம் கூராக்க வேணும். கட்டைகளை வயலில் இடித்து, நட்டு, தட்டிகளை சதுர வடிவமாக கட்டி, பட்டிகள் அமைப்பம். மாடுகளை, வயல்களில் பட்டிகளை மாற்றி மாற்றி கட்டி அடைச்சமெண்டால் சாணகத்துடன் மாடுகளின் சலமும் வயல்களில் சேரும். மாடுகளின் சலத்தில் கூடுதலான பசளை இருக்குதாம்.” என்றார்.

எல்லாரும் சம்மதித்து அடுத்த நாள் தொடங்கி கடுமையாக உழைப்பது என்ற உறுதியுடன் தமது வீடுகளுக்குச் சென்றனர்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/

பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/

பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/

பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/

பகுதி 36 –  https://vanakkamlondon.com/stories/2021/05/111664/

பகுதி 37 –   https://vanakkamlondon.com/stories/2021/05/112697/

பகுதி 38 –   https://vanakkamlondon.com/stories/2021/05/113713/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More