Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 44 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 44 | பத்மநாபன் மகாலிங்கம்

17 minutes read

மொறிஸ் மைனர் காரை  (Morris Minor) , வரையறுக்கப்பட்ட மொரிஸ் மைனர்  என்ற ‘பிரிட்டிஸ்’ (British) கொம்பனியார் (Morris Minor Limited) 1928 ஆம் ஆண்டளவில் தயாரிக்கத் தொடங்கினார்கள். ஆனால் லண்டனில் நடந்த   ‘ஏர்ல்ஸ் கோட் மோட்டார் சோ’ (Earls Court Motor Show) இல், 1948 ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

மைனர் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை மேம்படுத்தப்பட்டது. முதல் செய்யப்பட்ட காரை விட இரண்டாம் முறை தயாரிக்கப்பட்ட கார் மேம்பட்டதாக இருந்தது. மூன்றாம் முறை மேலும் மேம்படுத்தப்பட்டது. முதலாவதாக மொறிஸ் மைனர் கார் (Morris Minor =>MM) (1948 ஆம் ஆண்டு), இரண்டாவதாக மேம்படுத்தப்பட்ட (eries2) கார் (1952), மூன்றாவதாக மேம்படுத்தப்பட்ட கார் மைனர் 1000 (Minor 1000=>M1000) (1956 ஆம் ஆண்டு) இறுதியான மேம்படுத்தல் 1962 ஆம் ஆண்டு இடம் பெற்றது.

ஒப்பல் கார் (Opel) ஜேர்மனியில், ஒப்பல் குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்டது. கொம்பனியின் ஸ்தாபகரான அடம் ஓபல் (Adam Opel) இறந்தபின், அவரின் மகளான சோபி ஒப்பல் (Sophie Opel) என்பவர், தனது மகனின் ஆலோசனையின் பெயரில் 1899 ஆண்டில் கார்களை தயாரிக்க ஆரம்பித்தார். றெக்கோர்ட் (Rekord) என்பவருடன் இணைந்து ஓப்பல் றெக்கோர்ட் (Opel Rekord) (1958 – 1959) கார்களை செய்யத் தொடங்கினார்கள்.

மகாலிங்கத்தின் ஒன்றுவிட்ட மாமனின் மகன் வேலாயுதபிள்ளை, யாழ்ப்பாணம் சந்தை தொகுதிக்குள் ஒரு கடையை எடுத்து பல வருடங்களாக நடத்தி வந்தார். கடையில் நல்ல லாபம் வந்தது. அவர் திருமணம் செய்து, பெருமாள் கோவிலடியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, விதவையான தாயாருடனும் மனைவியுடனும் ஒரே மகனான சுந்தரலிங்கத்துடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

வேலாயுதபிள்ளை உருத்திரபுரம் எட்டாம் வாய்க்காலில் ஒரு காணியை குத்தகைக்கு எடுத்து விதைத்து வந்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் எட்டாம் வாய்க்காலுக்கு, கடையை மூடிய பிறகு போய், ஞாயிறு பின்னேரம் அல்லது திங்கள் அதிகாலை கடையை திறக்க யாழ்ப்பாணம் வந்து விடுவார்.

ஒரு நாள் சனிக்கிழமை அவர் யாழ்ப்பாணத்தால் கரடிப்போக்கு சந்திக்கு வர, இருட்டி விட்டது. அவர் வயலுக்கு போய்வருவதற்காக ஒரு சைக்கிளை கரடிப்போக்கு சந்தியில், தெரிந்த ஒருவரின் கடையில் வைத்து எடுப்பது வழக்கம்.

கரடிப்போக்கு சந்திக்கருகில் இருந்த றெயில்வே கடவையில் கதவுகள் இல்லை. வேலாயுதபிள்ளை, தூரத்தில் றெயின் வரும் சத்தம் கேட்டபோதும், அவசரத்தில் தான் கடவையை றெயின் வருவதற்கு முன்னரே தாண்டி விடலாம் என்ற நம்பிக்கையில் கடக்க முற்பட்டு றெயினால் மோதப்பட்டார்.

மகாலிங்கமே முதலில் சம்பவத்தை கேள்விப்பட்டார். அவர், மச்சான் றெயினில் அடிபட்டு இறந்தது விட்டார் என்று கேள்விப்பட்ட நேரம் தொடக்கம் கண்ணீர் விட்டபடியே இருந்தார். தனது தாய் தகப்பனையோ, பொன்னம்மாவையோ கூட்டிப்போக விரும்பவில்லை. றெயினில் அடிபட்ட உடல் என்ன நிலையில் இருக்கும் என்பதை பல முறை அவர் கண்டிருக்கிறார்.

மச்சான்காரனின் விசாரணைகள் முடிய, உடம்பை பெட்டியில் வைத்து எடுத்துச் சென்று, யாழ்ப்பாணத்தில் தகனம் செய்யும் வரைக்கும் நின்று, எல்லா உதவிகளையும் செய்தார். மீனாட்சியும் பொன்னம்மாவும் யாழ்ப்பாணத்தில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ‘பஸ்’ ஸில் சென்றனர். மகாலிங்கம் தாயாருடனும் மனைவியுடனும் தீராக்கவலையுடன் வீடு வந்து சேர்ந்தார்.

மைத்துனரின் இழப்பு மகாலிங்கத்தை வெகுவாகப் பாதித்தது. தனது பிள்ளைகளுடன் கதைக்கும் போது, “மச்சான்ரை தாயும் மனுசியும் மச்சான்ரை சிதைந்த உடம்பின் மேல் விழுந்து, புரண்டு கத்தினதும், எட்டு வயசு சிறுவனான சுந்தரலிங்கம் ஏங்கிப்போய் கதறி அழுததும் என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது.” என்று சொல்லுவார்.

ஒரு வருடத்தின் பின்னர் “போனவன் போயிட்டான், இருக்கிறவை போய் சேரும் வரை வாழத்தானே வேணும். பாவம் மருமகள், அவளும் சின்ன வயசுக்காரி.” என்று கவலையுடன் சொன்ன ஐயாச்சி (வேலாயுதபிள்ளையின் தாயார்) மருமகளை சம்மதிக்க வைத்து ஒருவருக்கு கலியாணம் செய்து வைத்தா. வேலாயுதபிள்ளையின் தங்கைக்கு பிள்ளைகள் இல்லை.

அவ மச்சாள்காரியிடம் “அண்ணி, நான் சுந்தரலிங்கத்தை என்னுடன் கூட்டிக்கொண்டு போறன். என்ரை சொந்த மகனைப் போலை வளர்ப்பன். மத்திய கல்லூரியில் சேர்த்து படிப்பிப்பன். ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்களிட்டை கூட்டிக் கொண்டு வருவன்.” என்று கேட்டா.    

‘சிறிய பள்ளிக்கூடத்தில் படிக்கிற சுந்தரலிங்கத்தை, அண்ணி பெரிய பாடசாலையிலே சேர்ப்பா. அவளின் கணவன் ஒரு மரக்காலையை வைத்து வியாபாரம் செய்கிறார். வசதியாக இருக்கினம். சுந்தரலிங்கம் இஞ்சை இருந்தால் அவன் தகப்பனின் நினைவுகளிலை தான் இருப்பான், இடம் மாறுகிறதும் நல்லது தான்.’ என்று நினைத்து தாயும் சம்மதித்தா.

அத்தையும் மாமனும், சுந்தரலிங்கத்தை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் (Jaffna Central College) சேர்த்து படிக்க வைத்தார்கள்.

ஒரு பெரிய வீட்டில் சுந்தரலிங்கத்துடன் வசதியாக வாழ்ந்து வந்தார்கள். சுந்தரலிங்கத்திற்கு ஒரு ‘ றேசிங்’ சைக்கிளை மாமன் வாங்கி கொடுக்க, அவன் அதில் பாடசாலைக்குப் போய் வந்தான். இடைக்கிடை தாயாரிடமும் போய் வருவான்.

மகிழ்ச்சியாக போன அவனது வாழ்வில் மீண்டும் ஒரு சோகம். அவன் க.பொ.த. (சா.தரப்) பரீட்சை எடுக்க இருந்த நேரத்தில், சைக்கிளில் மரக்காலைக்கு போன மாமன் ஒரு காரால் மோதுண்டார். மாதக் கணக்கில் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் அவருக்கு வைத்தியம் செய்தார்கள்.

பாடசாலைக்கு போகாமல், சுந்தரலிங்கம் மாமனுடன் ஆஸ்பத்திரியில் நின்று, அவரைப் பார்த்துக் கொண்டான். மாமன் ஒரு காலை இழந்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினார். வழமை போல வியாபாரம் செய்ய முடியவில்லை, மரக்காலையில் இருந்த பொருட்களை எல்லாம் வித்தும், முழுக்கடனையும் கொடுக்க முடியவில்லை. பெரிய வீட்டை விற்று விட்டு, கடன்களை எல்லாம் கொடுத்து விட்டு, கொழும்புத்துறையில் ஒரு தென்னங்காணியை குத்தகைக்கு எடுத்து, அங்கிருந்த ஒரு சிறிய வீட்டில் மனைவியுடனும் சுந்தரலிங்கத்துடனும் வாழ்ந்து வந்தார்.

மகாலிங்கத்தின் தங்கை தவத்திற்கும் திருமணம் முடிந்து விட்டது. இனி பிள்ளைகளை புது தம்பதிகளுடன் விடுவது முறையில்லை என்று மகாலிங்கமும் பொன்னம்மாவும் கருதினார்கள். மணிக்கு படிப்பித்த ஒரு ரீச்சருக்கு குழந்தையில்லை. ரீச்சர் வீட்டில் ஒரு அறையில் மணியுடன் படிக்கும் பிள்ளை ஒன்று தங்கி படித்து வந்தா.

ரீச்சர், மகாலிங்கத்திடம் “நீங்கள் பத்மாசனியை எங்கள் வீட்டில் விடுங்கள். எங்கள் வீட்டில் தங்கி படிக்கும் பிள்ளையுடன் அந்த அறையில் அவ தங்கலாம். நான் கவனமாக பார்ப்பன்.” என்றா.

மணியை ரீச்சருடன் விட்ட மகாலிங்கம், அருகில் இருந்த ஒரு நாற்சார் வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து நாதனையும் நாபனையும் தங்க வைத்தார். ‘லச்சுமி பவான்’ உணவகத்தில் சாப்பிட ஒழுங்கு செய்தார்.

கொழும்புத்துறைக்கு சுந்தரலிங்கத்தையும் மாமனையும் பார்ப்பதற்காக பொன்னம்மாவுடன் போன மகாலிங்கம், அவரின் சுகத்தை விசாரித்து விட்டு “சுந்தரலிங்கம் என்ன செய்கிறான்?” என்று கேட்டார். அத்தை “இவற்றை அச்சிடென்றுடன் (accident) அவன்ரை படிப்பும் முடிஞ்சுது. நல்லாய் படிச்ச பிள்ளை, இப்ப மாமனை தூக்கி நிமித்துவதுடன் அவன்ரை பொழுது போகுது.” என்று கவலையுடன் கூறினா.

அதற்கு சுந்தரலிங்கம் “அத்தை, மாமாவை நான் தானே பார்க்க வேணும்.” என்றான். மகாலிங்கம் “சுந்தரலிங்கம், படிப்பு முக்கியம், இப்படியே இருந்து என்ன செய்யப் போறாய்? உன் எதிர்காலம் படிப்பில் தான் இருக்குது. இப்ப மாமாவுக்கு ஓரளவு சுகம் தானே? நான் உன்னை ‘உயர் கல்விக் கல்லூரி’ (College of Higher studies) என்ற தனியார் பாடசாலையில் சேர்த்து விடுறன். நீ என்ரை பொடியங்களோடை அறையில் தங்கி நின்று படிக்கலாம்.” என்றார்.

சொன்ன மாதிரியே மகாலிங்கம், தன்ரை மச்சான்ரை மகனை தனியார் பாடசாலையில் சேர்த்து, நாதனுடனும் நாபனுடனும் தங்க வைத்தார். மூன்று பேரும் ‘லட்சுமி பவான்’ இலேயே சாப்பிட்டார்கள்.

மணியை ரீச்சர் நல்லாய் பார்த்துக் கொண்டா. அவள் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டாள். பொடியன்களுக்கு ‘கோட்டல்’ (Hotel) சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது.

சுந்தரலிங்கம், ஒவ்வொரு சனிக்கிழமையும் அத்தை வீட்டுக்கு தன்ரை ‘ றேசிங்’ சைக்கிளில் போவான். அத்தை கடற்கரைக்குப் போய் உடன் மீன்களாக வாங்கி வந்து, பொரித்து, கறி வைத்து மூன்று பேருக்கும் சாப்பாடு கட்டி கொடுத்து விடுவா. பொரியலை தனியாக ஒரு பேப்பரில் கட்டிக் கொடுத்தா. சுந்தரலிங்கத்திடம் “தம்பி, நீ கொண்டு போய் அவன்களுடன் சேர்ந்து சாப்பிடு” என்று சொல்லி அனுப்புவா. சுந்தரலிங்கத்தை எதிர் பார்த்து நாதனும் நாபனும் காத்திருப்பார்கள்.

நாபன் “இவனை எங்கை காணேல்லை. பசி குடலைப் புடுங்குது.” என்று சொல்ல நாதன் புன்னகையுடன் பார்த்திருப்பான். சுந்தரலிங்கம் சாப்பாட்டு பாசலை  (parcel) பிரித்து குழைத்து மூன்று பிளேட்களில் போடுவான். நாதனும் நாபனும் பொரியல்களுடன் ரசித்து சாப்பிடுவார்கள்.

நாபன் சாப்பிட்டு முடிய கை விரல்களை சூப்பியபடி “கனநாளுக்குப் பிறகு ஒரு முறையான சாப்பாடு” என்று சொல்லி மகிழ்வான். நாதனும் நாபனும் சுந்தரலிங்கத்துடன் மிகவும் சினேகிதமாக அன்புடன் நடந்து கொள்வார்கள்.

மகாலிங்கம் பெரிதாக ஒன்றிலும் ஆசை வைப்பதில்லை, தன்னிடம் உள்ள காசை யாராவது கேட்டால் மறுநாள் தேவைக்கு இல்லாவிட்டாலும் தூக்கி கொடுத்து விடுவார். அவருக்கும் ஒரு ஆசை மட்டும் இருந்தது, விதம் விதமான கார்களை வாங்கி ஓடவேண்டும் என்பது விருப்பம். பொன்னம்மாவுக்கு அவரது அந்த விருபத்தில் பெரிதாக விருப்பம் இல்லாவிட்டாலும் மறுத்து கதைப்பதில்லை.

மகாலிங்கம் “இஞ்சை பாரும் அப்பா, இப்ப மொரிஸ் மைனர் (Morris minor) காரின்ரை புது மொடெல் (model) ஒண்டு வந்திருக்கு. மைனர் 1000 (Minor 1000) எண்டு பெயராம். அதிலொன்றை வாங்கினால் என்ன?” என்று கேட்டார்.

பொன்னம்மா “அது நல்ல காரென்றால், இப்ப வைச்சிருக்கிற காரை வித்துப்போட்டு அதை வாங்குங்கோவன்.” என்றா. மகாலிங்கம் “பழைய காரை வித்தாலும் மைனர்1000 வாங்க காசு காணாது.  வித்த காசைக் கட்டி, மிகுதிக்கு பினான்ஸ் (finance) பண்ணலாம். என்ன பினான்ஸ் காசை மாதம் மாதம் கட்ட வேணும்.” என்றார்.

மகாலிங்கம் தனது பழைய காரை வித்து, ஒரு கறுப்பு நிறமான மைனர்1000 (Minor 1000) காரை பினான்ஸ் பண்ணி வாங்கினார். அதன் இலக்கம் 1 ஶ்ரீ 9041.

இவ்வளவு முதல் போட்ட காரை தனிய தனது சொந்த உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், ஒரு றைவரை (driver) வைத்து, தனக்கு தேவையில்லாத போது வாடகைக்கு விடத் தீர்மானித்தார்.

அப்படி றைவராக வந்தவர் தான் சிங்கள மாமா, அப்புகாமி. அப்புகாமி சாறம் கட்டி, ஒரு வெள்ளை அரைக்கை பெனியனையும் போட்டிருப்பார். பெனியனை சாறத்திற்குள் விட்டு சாறத்தை ஒரு அகலமான ‘பெல்ற்’ றால் (belt) இறுக்கமாக கட்டியிருப்பார். தலையை பின்பக்கமாக இழுத்து ஒரு கொண்டை போட்டிருப்பார். அவரது வயது, ஐம்பதிற்கும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். காலையில் மகாலிங்கத்தை அலுவலகத்தில் விட்டு விட்டு, வாடகைக் கார் தரிப்பிடத்தில் காத்திருப்பார்.

வாடகைக்கு கேட்பவர்களிடம் போகும் இடத்தையும், ஆட்களின் எண்ணிக்கையையும் விசாரித்த பிறகு தான் அவர்களை கொண்டு செல்ல சம்மதிப்பார். கரடு முரடான பாதையால் போகவேண்டி வந்தாலும், கூடுதலான ஆட்களை ஏற்றவேண்டி வந்தாலும் வாடகைக்கு போக மறுத்து விடுவார். அவருக்கு காரின் பாதுகாப்பு தான் முக்கியம்.

அப்புகாமி ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து காரை கழுவுவார். சாம்பிராணி புகை போடுவார். காருக்கு எப்போதும் பெற்றோல் போட்டு தயாராக வைத்திருப்பார். கார் கொம்பனி அறிவித்தபடி காலத்திற்கு காலம் ஓயிலை மாற்றி விடுவார். மூன்று மாதங்களுக்கொரு முறை காரை சேர்விஸ் (service) இற்கு விடுவார். அந்த செலவுகள் போக மிகுதி வருமானத்தில் பினான்ஸ் காசையும் கட்டி, சிறு தொகையை கிழமைக்கு கிழமை பொன்னம்மாவிடம் கொண்டு வந்து கொடுப்பார்.

வருமானமும் சீராக வந்து, தனது தேவையும் பூர்த்தியாகியும் ‘2 ஶ்ரீ’ தொடரிலக்கத்தில் கார்கள் வந்த போது, மகாலிங்கம் தனது ‘1ஶ்ரீ’ இலக்க காரை மாற்றி விட்டு ஒரு ‘2ஶ்ரீ’ இலக்க காரை வாங்க விரும்பினார். பொன்னம்மா ‘இவர் என்ன பொம்பிளைப் பிள்ளையை வைத்துக் கொண்டு இப்படி வீண் செலவு செய்கிறார்.’ என்று நினைத்த போதும் அமைதியாக இருந்து விட்டா. ‘1ஶ்ரீ’ கார் வித்த காசைக் கொடுத்து, மிகுதிக்கு ‘பினான்ஸ்’ (Finance) பண்ணி, ‘ 2 ஶ்ரீ 2656 ‘ இலக்கமுள்ள சாம்பல் நிற மைனர்1000 காரை வாங்கினார். சிங்கள மாமா, அப்புகாமி தொடர்ந்து றைவராக இருந்தார்.

மகாலிங்கம் ஒரு நாள் தன் மனைவியிடம் “பொன்னம்மா, இப்ப ‘ 3ஶ்ரீ ‘ தொடரிலக்கத்தில் கார்கள் வந்திட்டுது. இந்த காரை வித்துப்போட்டு ஒரு புதுக்காரை வாங்குவம் எண்டு பார்க்கிறன்” என்றார். பொன்னம்மா “நீங்கள் என்ன யோசிக்காமல் கதைக்கிறீங்கள். பொம்பிளைப் பிள்ளையை வைச்சிருக்கிறம். அவளும் வளர்ந்து கொண்டு வாறாள். இப்ப இருக்கிற கார் புதிசாய்த்தானே இருக்கு. இப்ப என்ன அவசரம்.” என்று சொன்னவுடன், ஒரு நாளும் எதிர்த்து கதைக்காத மனைவி அப்படி சொன்னதும் திகைத்துப் போனார்.

ஒருவாறு சுய நிலைக்கு வந்த மகாலிங்கம் “பிள்ளையள் வளரீனம், சின்னக்கார் எல்லாரும் போக காணாது. ஒரு பெரிய காரை வேண்டினால் தானே எல்லாரும் போய் வரலாம்.” என்றார்.

மகாலிங்கம் ‘ஓப்பல் றெக்கோர்ட்’ காரை வேண்ட நினைக்கிறார் என்று சிங்கள மாமாவுக்கு விளங்கி விட்டது. அவர் “ஐயா, இப்ப இந்தக்காறின்ரை பினான்ஸ் காசு எல்லாம் கட்டி முடிஞ்சுது. காரும் நல்ல நிலையில் இருக்குது. வேறை கார் என்னத்துக்கு?” என்றார். மகாலிங்கம் சம்மதிப்பார் போல் தெரியவில்லை. தனக்கு சம்பளம் தரும் முதலாளியுடன் அதற்கு மேல் கதைக்க முடியாது.

அவருக்கும் பதவியா குடியேற்றத்திட்டத்தில் காணி கிடைச்சிருந்தது. வளர்ந்த பிள்ளைகளும் மனுசியும் தான் காடு வெட்டி திருத்துகிறார்கள். சிங்கள மாமாவை,   “இவ்வளவு நாளும் உழைச்சது காணும். நாங்கள் வயலை பார்க்கிறம், நீங்கள் வந்து எங்களோடை இருங்கோ” என்று மகன்மார் நெருக்கினார்கள். சிங்கள மாமா மிகவும் கவலையுடன் வேலையை விட்டு விலகிச் சென்றார்.

கடைசியாக யாழ்ப்பாணம் போனபோது பெரியாச்சி மகாலிங்கத்திடம், “தம்பி, எங்களுக்கு கிட்டவாய் ஒரு காணியை விக்கப் போயினம். நீ வாங்கினால் மணிக்கு ஒரு வீட்டைக் கட்டலாம்.” என்று சொன்னா.

பொன்னம்மாவின் ஆக்கினையாலை பெரியாச்சியுடன் போய் காணியைப் பார்த்து விலை பேசி விட்டு வந்தார். கால போக வெள்ளாமை வெட்டி நெல் வித்தவுடன் பொன்னம்மா “காணியை வாங்கி, எழுதிக் கொண்டு வாருங்கோ” என்று சொல்லி காசை கணவனிடம் கொடுத்தா.

மகாலிங்கம் ஒரு நாள் காலையில் வெளிக்கிட்டு போனார். இரவு வரவில்லை, ‘காணியின் உறுதியை எழுத பிந்துதாக்கும்.’ என்று பொன்னம்மா நினைத்தா. மறுநாள் காலையும் மகாலிங்கம் வரவில்லை. பொன்னம்மாவிற்கு கவலை வந்து விட்டது. மாமியாரிடம் வந்து கதைத்துக் கொண்டிருந்தா.

இருளும் நேரம் மகாலிங்கம் ஒரு வெள்ளை நிற ‘ஓப்பல் றெக்கோர்ட்’ காரில் வந்து இறங்கினார். பொன்னம்மா தான் இவ்வளவு சொல்லியும் கேளாமல் புதுக்காரை வாங்கி வந்து விட்டாரேயென்று ஏங்கிப்போய் திகைத்து நின்றா.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/

பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/

பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/

பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/

பகுதி 36 –  https://vanakkamlondon.com/stories/2021/05/111664/

பகுதி 37 –   https://vanakkamlondon.com/stories/2021/05/112697/

பகுதி 38 –   https://vanakkamlondon.com/stories/2021/05/113713/

பகுதி 39 –   https://vanakkamlondon.com/stories/2021/06/114747/

பகுதி 40 –  https://vanakkamlondon.com/stories/2021/06/115804/

பகுதி 41 –  https://vanakkamlondon.com/stories/2021/06/116949/

பகுதி 42 –  https://vanakkamlondon.com/stories/2021/06/118039/

பகுதி 43 –  https://vanakkamlondon.com/stories/2021/06/119015/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More