Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 51 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 51 | பத்மநாபன் மகாலிங்கம்

25 minutes read

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்” – திருவள்ளுவர் 

பூமியில் வாழவேண்டிய முறையில், அறநெறியில் நின்று, உலக மக்கள் பயன்பட வாழ்பவன், மண் உலகத்தில் வாழ்ந்தாலும், வானுலகத்தில் இருக்கும் கடவுளுக்கு சமனாக மதிக்கப்படுவான்.

“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்,

ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.” என்று டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

1982 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி காலை கதிரவன் கிழக்கே ஒளிக்கதிர்களை வீசியபடி தோன்றினான். அன்றைய தினம் இலங்கையின் ஜனாதிபதி J.R.ஜெயவர்த்தனா கிளிநொச்சிக்கு வருகை தர இருந்தார். கிளிநொச்சி நகரமே பரபரப்பாக இருந்தது. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என்று இளைஞர்கள் கேட்டுக் கொண்டதால், மாணவர்களின் வரவு குறைவாக இருந்தது. ஆசிரியர்கள் பாடசாலைக்கு சென்று தங்கள் எழுத்து வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

மகாலிங்கம் எழுந்து வெளிக்கிட்டு, பொன்னம்மாவுடன் கிளிநொச்சிக்கு போக ஆயத்தமானார். அன்றும் வழமை போல அவரது வளர்ப்பு நாயான ஆனந்தன் மகாலிங்கத்தின் மேல் ஏறி, நக்கி விளையாடியது. தலையைத் தடவி விட்ட பின்பு தான் அவரை போக விட்டது.

ஜனாதிபதியை வரவேற்பதற்கான ஒழுங்குகள், விதானைமாருக்கு பங்கிட்டு கொடுத்திருந்த போதும், கிளிநொச்சி நகர விதானையார் என்றபடியால் மகாலிங்கத்திற்கே அதிகளவு வேலைகள் இருந்தன. அவர், மேடை போடுதல், அலங்காரம் செய்தல், மாலைகளுக்கு ஒழுங்கு செய்தல், ஒலி பெருக்கி, நிறைகுடம் வைப்பதற்கான ஒழுங்கள் என்று யாவற்றையும், முதல் நாள் இரவு வரை நின்று, செய்து விட்டு பிந்தியே வீட்டிற்கு வந்திருந்தார்.

மகாலிங்கம், மணியின் பிள்ளைகளை அணைத்து முத்தமிட்டு, விடை பெற்று பொன்னம்மாவுடன் குமரபுரம் நோக்கிச் சென்றார். குமரபுரத்திலே நாதனும் நாபனும் வாழ்கிறார்கள். ஆறாம் ஒழுங்கையால் இறங்கி நாபன் வீட்டிற்கு சென்று, அவனின் பிள்ளைகளை அணைத்து உச்சி மோர்ந்து விட்டு, மணியத்தார் வீட்டிற்கு போய் அவருடன் உரையாடினார். பின்னர் இரண்டாம் ஒழுங்கையில் இருந்த, நாதன் வீட்டிற்குச் சென்றார். நாதனின் பிள்ளைகளை அணைத்து கதை கேட்டு விட்டு, நல்ல சந்தோசமாகவே கந்தோர் நோக்கிச் சென்றார்.

கந்தோருக்கு போனபோது அங்கே டீ. ஆர். ஓ. கந்தோரில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற நண்பர் ஒருவர் மனைவியுடன் வந்திருப்பதைக் கண்டு, அவர்களை தனது வீட்டிற்கு மதிய உணவிற்கு வரும் படி அழைத்தவர், தன்னுடன் வந்த பொன்னம்மாவை கூட்டிச் சென்று சந்தையில் மரக்கறிகளை வாங்கிக் கொடுத்து, “வீட்டுக்குப் போய் ஒரு கோழியை அடித்து, சாப்பாட்டை ஆயத்தம் செய், நான் வரேக்கை அவையளைக் கூட்டி வாறன்.” என்று கூறி, பஸ்ஸில் ஏற்றி அனுப்பினார்.

பொன்னம்மா ஒரு நாளும் தனியே பஸ்ஸில் போகாதவ, பஸ்ஸில் ஒருவன் தனது தாலிக்கொடியை உற்று பார்ப்பதை கண்டு, திருடனாய் இருப்பானோ என்று பயந்து, அவன் கவனிக்காத போது, தாலிக்கொடியை கழற்றி சேலைத் தலைப்பில் முடிஞ்சு கொண்டா.

அரசாங்க உத்தியோகத்தருக்கு ஓய்வு பெறும் வயது ஐம்பத்தேழு ஆகும். விரும்பினால் அறுபது வயது வரை, ஒவ்வொரு ஆண்டும் பதவி நீடிப்பு பெறலாம் என்று ஒழுங்கு விதிகள் இருந்தன. மகாலிங்கம் விதானையாருக்கு இப்ப   ஐம்பத்தேழு வயது நிரம்பி விட்டது.  ஓய்வு பெற்ற பின்னர் மாடுகள், ஆடுகள் கொண்ட ஒரு பண்ணையை தொடங்குவதென்று தீர்மானித்து, ஒரு வருடத்திற்கு மட்டும் பதவி நீடிப்பு பெற்றிருந்தார். ஜனாதிபதி வரும் போது மற்ற விதானைமாருடன் நின்று தலையைக் காட்டி விட்டு, ஓய்வு பெற்ற நண்பனின் குடும்பத்தை மதிய உணவிற்கு கூட்டிச் செல்ல எண்ணியிருந்தார்.                   

மகாலிங்கம், டீ. ஆர். ஓ. கந்தோருக்குப் போனபோது, எதிர்பாராத பொறுப்பு ஒன்று அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. டீ. ஆர். ஓ. அவரை அழைத்து “விதானையார், எனக்கு சரியான காய்ச்சல் கூட்டத்திற்கு வர ஏலாமலிருக்குது. சிரேஷ்ட விதானையார் என்பதால் எனக்கு பதிலாக நீர் தான் பங்கு பற்றோணும்.” என்று கூற, அவர் முதலில் பயந்த போதும், பின்பு தேறி மேலதிகாரியின் சொற்படி நடப்பது தனது கடமை என்று எண்ணி சம்மதித்தார். “இளைஞர்களின் வெறுப்பை தான் பெற பயந்து, டீ. ஆர். ஓ. மகாலிங்கம் அண்ணையை மாட்டி விடுறார்” என்று ஏனைய விதானைமார் கதைத்துக் கொண்டனர்.

ஜனாதிபதி வந்த போது, ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகளுடன் நின்று மகாலிங்கமும் ஜனாதிபதிக்கு மாலை போட்டு வரவேற்றார். நிகழ்ச்சி முடியும் மட்டும் நின்று, ஜனாதிபதி போன பின்னர் தனது கந்தோருக்குத் திரும்பினார்.

சில பாடசாலைகளை இணைத்து கொத்தணி பாடசாலைகள் என்று ஒரு பொதுவான அதிபரின் கீழ் இயங்கிய காலம் அது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபரே கொத்தணிக்கும் அதிபர். அவர் நாபனை அழைத்து “தம்பி, ஒருக்கால் மற்ற பாடசாலைகளை போய் பார்க்க வேணும். உம்மடை மோட்டார் சைக்கிளில் கூட்டி போறீரா?” என்று கேட்டார். நாபனும், “அதுக்கென்ன சேர், வாங்கோ” என்று சொல்லி அவரைப் பின்னால் ஏற்றி கொண்டு சென்றான்.

மகாலிங்கம் அப்போது தான் கூட்டம் முடிந்து வந்து தனது கந்தோருக்கு போக திரும்ப எண்ணியவர், நாபனும் அதிபரும் வருவதைக் கண்டதும் நின்று, அதிபரை பார்த்து சிரித்து விட்டு, நாபனைப் பார்த்து சிரித்து நேரே போ என்று தலையை ஆட்டினார்.

கந்தோரில், நேர்முக பரீட்சைக்கு செல்வதற்கு விதானையாரின் நற்சான்றிதழ் பெறுவதற்காக, இரண்டு இளைஞர்கள் வந்து காத்திருந்தார்கள். மகாலிங்கம் கிளார்க் பிள்ளையிடம் “கொஞ்ச தண்ணி தா அம்மா.” என்று கேட்டு, அவள் செம்பில் கொடுத்த தண்ணீரை வாங்கி, முழுவதையும் ‘மடக், மடக்’ என்று குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

இரண்டு பேரிடமும் விபரங்களைக் கேட்டு, நற்சான்றிதழ் புத்தகத்தில் பதிந்து, ஒப்பமிட்டு, பதவி முத்திரையிட்டு, நற்சான்றிதழ்களை கொடுக்கும் போது “பிள்ளைகள், நேர்முகப் பரீட்சைக்கு, பயப்படாமல், நம்பிக்கையோடை போங்கோ, கடவுள் துணையாயிருப்பார்.” என்று சொல்லி அனுப்பினார்.

வேறு சிலரின் வேலைகளைப் பார்த்து கொண்டிருக்கும் போது, மகாலிங்கத்தாருக்கு நெஞ்சுக் குத்து தொடங்கியது. வழமையாக அவருக்கு இதய வருத்தம் இருந்தது. இன்று மேலதிகாரியின் வற்புறுத்தலால் கூட்டத்தில் கலந்து கொண்டதனால் ஒரு பதட்டமும் இருந்தது. வந்திருந்தவர்களிடம் “கொஞ்சம் பொறுங்கோ. நெஞ்சுக்கை குத்துது, ரஞ்சன் டொக்டரிட்டை ஒருக்கால் காட்டிக் கொண்டு ஓடி வாறன்.” என்று சொல்லி விட்டு, காரை தானே ஓட்டி வந்து ரஞ்சனின் டிஸ்பென்சரி வாசலில் நிறுத்தினார்.                           

எப்போதும் டொக்டரிடம் ஆறுதலாக நின்று காட்டும் அவர், இன்று “டொக்டர், எனக்கு என்னவோ செய்யுது, என்னெண்டு பாருங்கோ.” என்று சத்தமாக சொல்ல, ஓடி வந்த டொக்டர் அவரை அணைத்து அழைத்துச் சென்று, ” விதானையார், கட்டிலில் ஏறிப்படுங்கோ.” என்று சொல்ல ஏறிப்படுத்தவருக்கு, உடம்பு உதற தொடங்கி, ஒரு வித மயக்க நிலைக்குப் போய் கொண்டிருந்தார்.

டொக்டர் “விதானையார்…. விதானையார்….” என்று கன்னத்தில் தட்டினார். எந்த பிரதிபலிப்பும் இல்லை. உதறல் குறைவதற்கான ஊசியைப் போட்டார். உதறல் குறைந்தது, ஆனால் மயக்க நிலை மாறவில்லை. செயற்கை சுவாசம் கொடுப்பதற்காக டொக்டர் அவரின் உதட்டில் தனது வாயை வைத்து ஊதினார். மகாலிங்கம் ஒரு முறை சத்தியெடுத்தார். அதன் பிறகு ‘பல்ஸ்’ (pulse) குறைய ஆரம்பித்தது. டொக்டர் கடைசி முயற்சியாக அவரது நெஞ்சில் கையை வைத்து பிசைந்தார்.

டொக்டர் எவ்வளவு முயற்சி செய்தும் மகாலிங்கத்தைக் காப்பாற்ற முடியவில்லை, அவரது கண்கள் நிரந்தரமாக மூடிக் கொண்டன. ரஞ்சன் டொக்டர் மகாலிங்கத்தின் குடும்பத்தினர் அனைவருக்கும் வைத்தியம் பார்ப்பவர், அவருக்கு மகாலிங்கத்தாரில் அன்பும், தனி மரியாதையும் இருந்தது. தொழில் ரீதியாக அவர் பல மரணங்களை கண்டிருக்கிறார், அவருக்கே மகாலிங்கத்தின் மரணத்தைத் தாங்க முடியவில்லை.

செய்தி எல்லா இடமும் பரவி தங்கள் விதானையாரைப் பார்க்க சனங்கள் வந்து சேர தொடங்கினார்கள். டீ. ஆர். ஓ. தனக்கு மகாலிங்கம் இறந்த செய்தியை சொன்னவனிடம் “என்ன பகிடி விடுறாயா? இஞ்சை பார், அவர் பொடியளுக்கு கொடுத்து விட்ட நற்சான்றிதழுக்கு தான் மேலொப்பம் (Counter sign) வைச்சுக் கொண்டிருக்கிறன். அவர் எழுதிய மை ஈரம் இன்னும் காயேல்லை.” என்றார்.

வந்தவன், “உண்மை தான் ஐயா, இப்ப அவரை ரஞ்சன்ரை டிஸ்பென்சரியிலை தான் வைச்சிருக்கினம்.” என்று சொன்னான். கையொப்பங்களைப் போட்டு முடித்து விட்ட டீ. ஆர். ஓ. “பாவம் நல்ல மனுஷன்.” என்றபடி விரைந்து சென்று காரில் ஏறி மகாலிங்கத்தைப் பார்க்க போனார்.

பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நின்ற செயலாளர் கிருஷ்ணராஜாவிற்கு செய்தி தெரிந்ததும், கொழும்பில் நின்ற எம்.பி ஆனந்தசங்கரிக்கு தொலைபேசியில் மகாலிங்கம் இறந்த கதையைச் சொல்ல, அவர் “விதானையாரை டிஸ்பென்சரியிலை வைச்சிருக்கிறது சரியில்லை, உடனே எங்கடை ஜீப்பிலை ஏத்தி அவரை வீட்டுக்குக் கொண்டு போங்கோ.”என்று அறிவுறுத்தினார்.

உடனே கிருஷ்ணராஜா ஜீப்பை எடுத்துக் கொண்டு டிஸ்பென்சரிக்குப் போனார். அவர் போனபோது மகாலிங்கத்தாரிடம் பயிற்சி எடுத்த விதானைமார் எல்லாரும் கண்ணீர் மல்க கூடி நின்றனர்.

செய்தியை குடும்பத்தினருக்கு சொல்வதற்காக ஒருவரை காரொன்றில் முன்னுக்கு அனுப்பினார்கள். மகாலிங்கத்தாரை ஜீப்பில் ஏற்றி இருவர் அணைத்து பிடிச்சிருக்க கிருஷ்ணராஜா ஜீப்பை ஓடினார். ரஞ்சன் டொக்டருக்கு மகாலிங்கத்திற்கும் பொன்னம்மாவிற்கும் இருந்த நெருக்கமான உறவு தெரியும். பொன்னம்மாவிற்கும் நெஞ்சு சம்பந்தமான வருத்தம் இருந்தது. அவசரத்திற்கு இருக்கட்டும் என்று தனது மருத்துவ பெட்டியையும் (medical kit) எடுத்து கொண்டு தனது காரில் ஜீப்பின் பின்னால் போனார். அவரை தொடர்ந்து டீ. ஆர். ஓ. தனது காரை செலுத்தினார். விதானைமாரும் வந்திருந்த வேறு சிலரும் கார்களில் பின் தொடர்ந்தனர்.

சமையலை செய்து முடித்த பொன்னம்மா, கணவரையும் விருந்தினர்களையும் எதிர்பார்த்து வெளி மதவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தா.  சிறிது நேரத்தில் மணியும் பிள்ளைகளுடன் வந்து மதவில் இருந்தாள். தூரத்தில் வரிசையாக வந்த வாகனங்களைக் கண்டதும் எதுவுமறியாத பொன்னம்மா “மந்திரி இந்த பாதையிலை தான் யாழ்ப்பாணம் போறானாக்கும்.” என்று மகளுக்குச் சொன்னா. மணி “ஐயா அப்பிடி சொல்லேல்லையே அம்மா” என்றாள்.

முன்காரில் வந்து இறங்கியவர் தயங்கி, தயங்கி வந்து, “அம்மா, ஐயா எல்லோ எங்களை விட்டிட்டுப் போட்டார்.” என்று சொன்னதும், பொன்னம்மா ‘இவன் என்ன சொல்லுறான்?’ என்று ஒரு கணம் நினைத்தவ, அவன் சொன்ன செய்தி மனதில் உறைக்க “ஐயோ, என்ரை ஐயா” என்று கத்தியபடி ஜீப்பை நோக்கி ஓடினா. மணியும் கதறி அழ, பிள்ளைகள் “அம்மையா.. அம்மையா..” என்று கத்திக் கொண்டு பேர்த்தியின் பின்னால் ஓடினார்கள்.

பொன்னம்மா ஜீப்பில் கண்மூடி தூங்குபவர் போல் இருந்த மகாலிங்கத்தின் முகத்தைத் தடவித் தடவி “என்ரை ஐயா, நான் இனி என்ன செய்வன்” என்று குழறி அழுதா. காரில் இருந்து இறங்கி வந்த டொக்டர் பொன்னம்மாவின் கையைப் பிடித்து “வாருங்கோ அம்மா, ஐயாவை தூக்கி உள்ளுக்குள்ளை கொண்டு வரட்டும்” என்று சொல்ல ஓடி வந்த பெண்ணொருத்தி பொன்னம்மாவின் மற்ற கையை பிடித்து அவ அழ அழ கூட்டிக் கொண்டு உள்ளே போனாள்.

வீட்டு விறாந்தையில் ஒரு அகலமான வாங்கைப் போட்டு, ஒரு வெள்ளை வேட்டியை அதன் மேல் விரித்து, மகாலிங்கத்தை படுக்க வைத்து இன்னொரு வேட்டியினால் போர்த்து விட்டனர். பொன்னம்மா அவரின் காலடியில் இருந்து கதறி கதறி அழுதுகொண்டே இருந்தா. அதை எதிர்பார்த்து வந்த டொக்டர், அவவை தொடர்ந்து கத்தி அழ விடக்கூடாது என்று நினைத்து, அவவின்ரை கையில் அரை மயக்க நிலையில் வைத்திருப்பதற்காக ஒரு ஊசியைப் போட்டார். மணி தன்னை எப்போதும் செல்லமாக வளர்த்த தகப்பன் ஏமாற்றி விட்டு போய் விட்டாரே என்று ஏங்கிப் போய் அவரை அணைத்தபடி இருந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.

மணியத்தார், தனது நண்பரின் இழப்பை தாங்க முடியாத நிலைமையிலும், நாதனுக்கும் நாபனுக்கும் அறிவித்து கூட்டி வரவேண்டும் என்று நினைத்து, தனது மூத்த மகன் பேரின்பனை ஒரு மோட்டார் சைக்கிளில் நாபனிடம் அனுப்பினார். சுசீலாவையும் பிள்ளைகளையும் கூட்டி வரும்படி இரண்டாவது மகனை அனுப்பி விட்டு, மூத்தவனான நாதனை, தான் நேரில் போய் கூட்டி வருவதற்காக காரில் புறப்பட்டார்.

நாதனின் பாடசாலைக்கு சென்ற மணியத்தார் நாதனிடம் “ஐயாவுக்கு வருத்தம் கொஞ்சம் கடுமை. பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போக வேணும், காரில் ஏறி வாருங்கோ” என்று கேட்க, ஆஸ்பத்திரிக்கு ஏற்றுவது தானே என்ற நினைப்பில் நாதன் “நீங்கள் முன்னுக்கு போங்கோ. நான் மோட்டார் சைக்கிளில் வாறன்.” என்று சொல்லி, மோட்டார் சைக்கிளில் காரின் பின்னால் சென்றான்.

மோட்டார் சைக்கிளை பரந்தன் சந்தியில் ஒரு கடையில் விட்டு விட்டு, ஆஸ்பத்திரிக்கு போக நினைத்த நாதனிடம் “அவர் இறந்து விட்டார், வீட்டுக்கு கொண்டு போட்டினம்.” என்று கடைக்காரன் சொல்ல, அவன் கண்களை கண்ணீர் மறைக்க, மணியம் மாமாவிடம் “நான் வீட்டை போய் அவையளையும் கூட்டி கொண்டு வாறன்” என்று சொல்லி விட்டு வீட்டிற்குச் சென்றவன் மனைவி, பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு தகப்பன் வீட்டுக்குச் சென்றான்.

நாபனின் பாடசாலைக்கு சென்ற பேரின்பன் அதிபரிடம் உண்மையைச் சொல்ல அவர் ‘இப்ப தானே தலையாட்டி சிரித்து விட்டுப் போனவர்’ என்று திகைத்தவர், நாபனை கூட்டிச் செல்லுமாறு கண் காட்டினார். நாபனிடம் போன பேரின்பன் “அத்தான், மாமா கொஞ்சம் வருத்தமாய் இருக்கிறார், உங்களை கூட்டி வரட்டாம்.” என்றான்.

நாபன் தனது மோட்டார் சைக்கிளை எடுக்க “நீங்கள் இந்த பதட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட வேண்டாம். பூட்டி வைத்து விட்டு என்ரை மோட்டார் சைக்கிளில் வாருங்கோ, போவம்.” என்று கூறியவன், முதலில் தங்கள் வீட்டுக்கு கூட்டிப் போனான். போகும் போது வழியில் “அத்தான், மாமா ‘காட் அற்றாக்கில்’ (Heart attack) போயிட்டார்.” என்று சொல்ல நாபன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

மணியம் மாமா வீட்டில் சுசீலா அழுதபடி பிள்ளைகளுடன் போவதற்கு வெளிக்கிட்டு நின்றாள். மாமியாரும் அவசரமாக வெளிக்கிட்டவ, “கொஞ்சம் தேத்தண்ணி எண்டாலும் குடியுங்கோ ” என்று கொண்டு வர, அவவின் வற்புறுத்தலினால் ஒரு வாய் குடித்த நாபனுக்கு, கவலையின் மிகுதியினால் அதனை குடிக்க முடிய வில்லை. சுசீலாவிடம் திருப்பி கொடுத்து விட்டான். மணியம் மாமா, நாபனையும் சுசீலாவையும் பிள்ளைகளையும் தனது மனைவியையும் காரில் ஏற்றி, மகாலிங்கத்தின் வீட்டிற்கு வேகமாக செலுத்தினார்.

மிகவும் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்று, ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு, நாதன் தகப்பனைக் காண ஓடினான். இந்திராவும் பிள்ளைகளும் அழுதபடி தொடர்ந்து ஓடினார்கள். தகப்பனின் அருகில் இருந்து கட்டிப்பிடித்த நாதன் ” ஐயா, கல்யாணம் செய்து பிள்ளைகள் பெற்ற பிறகும் எங்களை பொத்தி, பொத்தி வளர்த்திட்டு இப்படி திடீரென்று விட்டிட்டு போனால் நாங்கள் என்ன செய்யிறது, ஐயா.” என்று வாய்விட்டு அழுதான். இந்திரா மாமியாரை அணைத்து அழுதா, பிள்ளைகள் திகைத்துப் போய் நின்றனர்.

மகாலிங்கம் இறந்ததைக் கேள்விப்பட்ட உடனே சுப்பையா மாஸ்டரும் மனைவியும் பாடசாலைக்கு லீவு போட்டு விட்டு வந்திருந்தனர். மகாலிங்கத்தை வாங்கில் கிடத்திய நேரம் தொடக்கம் சோகமான முகங்களுடன் அவரது தலைமாட்டிலேயே இருந்தனர்.

நாபன் காரால் இறங்க, சுசீலா அழுது கொண்டு ஆறுதலாக அவனை கையை பிடித்துக் கூட்டிப் போனாள். நாபன் தகப்பனின் கோலத்தைக் கண்டு உடைந்து போனான், குரல் அடைத்தது. தாயைப் பார்த்தான், அவ அரை மயக்கத்தில் தகப்பனின் காலடியில் கிடப்பதையும் கண்டான். கட்டுப்படுத்தி வைத்திருந்த சோகம் அளவிற்கு மீற “ஐயா… ஐயா, என்ரை ஐயா” என்று உரத்த குரலில் கத்தி அழுதான். “காலமை தானே ஐயா என்னைப் பார்த்து சிரித்தீங்கள். நீங்கள் காரை திருப்பாமல் நின்று கொண்டு, நீ போ எண்டு தலையை அசைத்தீங்கள். நீங்கள் நின்றாலும் நான் தொடர்ந்து போகவேணும் எண்டு நினைச்சா, என்னை போக விட்டீங்கள், ஐயா.” என்று கூடி நின்ற சனம் பயப்பிடும் அளவிற்கு அழுதான்.

சுசீலா நாபனை கையைப் பிடித்து மாமனின் காலடியில் அழுது களைத்துப்போயிருந்த சுந்தரின் அருகில் இருத்தி விட்டு, மாமியாரின் மறு பக்கத்திலிருந்து அவாவை அணைத்துக் கொண்டாள். கண்களால் கண்ணீர் ஓடி கொண்டேயிருந்தது. “ஐயோ, என்ரை மாமா, எங்களை ஒருநாளும் மருமகளவையாக பார்க்கேல்லையே நீங்கள், மகள்களாக தானே பார்த்தீங்கள்” என்று அரற்றியபடி இருந்தாள்.

சுந்தர் தனது அருகில் இருந்த நாபனிடம், “எதிர்காலத்தில் என்ன செய்யிறது எண்டு தெரியாமல் தவித்து நின்ற என்னை, கூட்டி வந்து பிள்ளை போல் பார்த்து ஆளாக்கி, மகளையும் கலியாணம் செய்து தந்த மாமாவை கடைசிக் காலம் மட்டும் நல்லாய்ப் பார்க்க வேணும் எண்டு நினைச்சிருந்தன். ஏமாற்றிப் போட்டு போட்டாரே.” என்று சொல்லி மறுபடியும் அழ ஆரம்பித்தான். ஊரார், உறவினர், கிளிநொச்சி பிரதேச மக்கள் எல்லாரும் திரண்டு வந்து பார்த்தார்கள்.

மகாலிங்கத்தாரிடம் பயிற்சி பெற்ற விதானைமார், தாங்களும் அவரின் பிள்ளைகள் போல ஓடி ஓடி எல்லா அலுவல்களையும் பார்த்தார்கள். காணி முழுவதும் பந்தல்கள் போட்டார்கள். இடம் போதாமல் இருந்ததால் விதானையார் வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடையில் இருந்த வேலியை பிடுங்கி விட்டார்கள். ஆனந்தசங்கரி மறுநாள் மத்தியான றெயினில் வருவதாகவும் விதானையாரை தான் வரும் வரைக்கும் வைத்திருக்கும் படியும் தந்தி அடித்திருந்தார்.  நாய் ஆனந்தன் தனக்கு விசயம் தெரிந்ததை போல ஊழையிட்டு அழுதது.

அன்றிரவே சனங்கள் வந்து திரண்டனர். இரவு முழுக்க அழு குரல்கள் கேட்டபடி இருந்தன. அவர்கள் போட்ட பந்தல்கள் வந்தவர்களில் ஒரு சிறிய பகுதியினருக்கே போதுமாயிருந்தது. மக்கள் அருகிலிருந்த குஞ்சுப்பரந்தன் பாடசாலை கட்டிடங்களிலும் மைதானத்திலும் கூடியிருந்தனர்.

பொழுது புலர்ந்த போது மீசாலையிலிருந்து பொன்னம்மாவின் உறவினர்கள், கிரியைகளுக்கு தேவையான பொருட்களுடனும் குருக்களுடனும் ஒரு காரில் வந்து இறங்கினார்கள்.

கிளிநொச்சி பஸ் டிப்போவிலிருந்து இரண்டு பஸ்கள் ‘விதானையார் இல்லம்’ என்று எழுதிய பெயர்ப்பலகையுடன் சனம் நிரம்ப, நிரம்ப விதானையார் வீடு வரை ஓடின. சனங்கள் வந்து குவிந்தனர். பஸ்ஸில் வந்திறங்கிய பெண்களில் சிலர் நிலத்தில் விழுந்து அழுதார்கள். வரும் போது நிரம்பி வழிய வந்த பஸ்கள் போகும் போது வெறுமையாகப் போயின. காலை முதல் “விதானையார் ஐயா”, “எங்கடை ஐயா”, ” என்ரை சீமானே”, “எங்கடை விதானையார்”, “என்ரை தெய்வமே” என்ற ஓலங்கள் இடையறாது கேட்டது. பிள்ளைகளும் உறவுகளும் கத்தி அழுததை விட விதானையாரை நேசித்த மக்கள் அழுத சத்தம் ஓங்கி ஒலித்தது.

மக்கள், நடந்தும், சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், ரக்டர்களிலும், கார்களிலும் வந்து நிறைந்தனர். விதானைமாருக்கு வாகனங்களை ஒழுங்கு படுத்தி விடுவது பெரும் சுமையாக இருந்தது. எட்டாம் வாய்க்கால் சந்தியிலிருந்து பொறிக்கடவை அம்மன் சந்தி வரைக்கும் வாகனங்கள் நின்றன. பெரிய பரந்தன் மக்கள் வெள்ளத்தினாலும் வாகன நெரிசலாலும் பூமிக்குள் புதைந்து போகுமோ என்று பயப்படும்படியாக நிலைமை இருந்தது. அன்று பெரிய பரந்தனில் கூடிய சனம் போன்று கிளிநொச்சி பிரதேசத்தில் முன்னர் எப்போதும் கூடியதில்லை.

ஓடித் திரிந்து ஒழுங்குகளை செய்வித்த மணியத்தாரின் காலை சனங்கள் மிதித்ததால், அவரது வலது கால் பெரு விரல் நிகம் கிழிந்து தொங்கியது. இரத்தம் பெருகி ஓடியது. ஆஸ்பத்திரிக்கு போய் மருந்து கட்டி வருமாறு சொன்ன போது “மலை போலை விதானையார் விழுந்து கிடக்க நான் ஆஸ்பத்திரி வழிய திரியட்டோ.” என்று சொல்லி மறுத்து விட்டார். யாரோ மூலிகைகளையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து கொண்டு வந்து ஒரு வெள்ளைத் துணியால் கட்டி விட்டனர். அந்த காலுடன் மீண்டும் ஓடி ஓடி அலுவல்களைப் பார்த்தார்.

அப்போது தான் முழுமையான விழிப்புக்கு வந்த பொன்னம்மா, இருந்தபடி தவழ்ந்து வந்து மணியத்தாரின் காலைப் பிடித்து ” ஐயோ மணியண்ணை, ஐயா என்னை தவிக்க விட்டிட்டு போட்டாரே, நான் இனி என்ன செய்ய.” என்று கதறினா. எங்கிருந்தோ ஓடி வந்த மணி மணியத்தாரின் தோளில் சாய்ந்து “மாமா, நாங்கள் ஐயாவை இனி எப்ப காணப்போறம்.” என்று சொல்லி அழ, இந்திரா, சுசீலா, பிள்ளைகளும் அழ, கூடி இருந்த மக்களும் அழுதார்கள். எத்தனையோ செத்த வீடுகளை முன்னின்று நடத்திய மணியத்தார் தனது வாழ்வில் முதன் முறையாக அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது விக்கி விக்கி அழுதார்.

எம்பி ஆனந்தசங்கரி றெயினால் இறங்கி நேராக செத்த வீட்டுக்கு வந்து விட்டார். நவஜீவனம் போதகர் தம்பிராசா ஐயா தனது நோயையும் பொருட்படுத்தாது மனைவியுடன் வந்திருந்தார். மத்திய மகாவித்தியாலய அதிபரும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் ஒரு பஸ்ஸில் வந்தார்கள். முருகானந்தா அதிபர், ஆசிரியர்கள், பிள்ளைகளும் வந்திருந்தார்கள்.

முத்தர்கணபதி தனக்கு அருகில் கவலையுடன் நின்ற பேரம்பலத்தையும் நல்லையாவையும் பார்த்தார். தன்னோடு இவர்களிருவரும் தான் இப்போது இருக்கிறார்கள் என்று எண்ணினார்.             

“பெரிய பரந்தனை உருவாக்க வழிகாட்டியவர் தம்பையர் தான். அவருடன் சேர்ந்து நானும் ஆறுமுகத்தாரும் உழைச்சம். விசாலாட்சி எப்படிப்பட்ட மனுசி, பத்து வயதான கணபதியுடன் இந்த காட்டு பிரதேசத்திற்கு வந்து, கணவருடன் சேர்ந்து பாடுபட்டவ.” என்று தகப்பனானமுத்தர் சொன்னதை நினைத்து பார்த்தார்.

முத்தர்கணபதி தான் கணபதியாருடன் சேர்ந்து பெரிய பரந்தனை எல்லா வளமும் உள்ள ஊராக மாற்ற பாடுபட்டதையும், கடல் பெருக்கெடுத்து வந்ததால் குடிநீருக்கும் தட்டுப்பாடு வந்த போது மகாலிங்கம், பெரியவர்கள் இங்கேயே இருக்க, பிள்ளைகளுக்கு கனகாம்பிகைக்குளத்தில் காணி எடுத்து கொடுத்ததையும் நினைத்தார். “கணபதியண்ணை போனாலும் எல்லாத்தையும் பார்க்க நீ இருக்கிறாய் என்று நம்பியிருந்தோமே. ஏனையா எங்களை விட்டிட்டு போனாய் “என்று சொல்லி மகாலிங்கத்தின் முகத்தை பார்த்து அடக்க முடியாமல் வாயில் சால்வையை வைத்து விம்மிக் கொண்டே இருந்தார்.

ஒரு பஸ்ஸில் வந்த கிறிஸ்தவ மக்கள் ” ஐயோ, கிரியைகள் தொடங்க முன்னம் நாங்கள் எங்கடை விதானையார் ஐயாவுக்கு ஒருக்கால் செபம் பண்ணோணும், சனம் போக விடூதில்லை.” என்று கெஞ்சினார்கள். பேரின்பன் வந்து நாபனிடம் அனுமதி பெற்று அவர்களை அழைத்து வந்தான். அவர்கள் மகாலிங்கத்தை சுற்றி முழங்காலில் இருந்த படி கண்ணீர் மல்க செபம் செய்தார்கள். “இப்படி ஒரு மனிதரை நாங்கள் இனி எப்போ காண்போம், எங்களுக்கு வாழ்வு தந்த தெய்வம் அவர்.” என்று அழுதார்கள்.                                                                                                                                 அவர்கள் போன பிறகு குருக்கள் கிரியைகளை ஆரம்பித்தார். நாதனும் நாபனும் தங்கள் தந்தையாரின் இறுதி கிரியைகளை செய்வதற்காக முன்னுக்கு வந்து இருந்தனர். நாதனின் இரண்டு பிள்ளைகள், நாபனின் இரண்டு பிள்ளைகள், மணியின் நான்கு பிள்ளைகள் எல்லாரும் தங்கள் பேரனைச் சுற்றி எரியும் பந்தங்களுடன் அழுதபடி நின்றார்கள். கிரியைகள் முடிந்ததும் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் இரா.சின்னத்தம்பி இரங்கல் உரையாற்றினார்.

பொன்னம்மாவும் மணியும் மற்ற பெண்களும் பெட்டியை தூக்க விடாது கதறினார்கள். சில பெண்கள் அழுது கொண்டே அவர்களைப் பிடித்தனர். மகாலிங்கத்தாரை தூக்க வந்த உறவினர்களிடம் இளம் விதானைமார் “ஐயா, எங்களுக்கு பயிற்சி தந்த குரு அவர்.    அவருக்கு நாங்கள் ஒண்டும் செய்யேல்லை, சுடலை வரைக்கும் அவரை தூக்கி வரோணும். தயவு செய்து விட்டுத் தாருங்கோ.” என்று கேட்டு, தூக்கிக் கொண்டார்கள்.

கணவரை தூக்கியதைக் கண்ட பொன்னம்மா “ஐயா, என்னை விட்டிட்டு போகாதேங்கோ” என்று கத்தியபடி மயங்கி விழுந்தா, சில பெண்கள் அவவை விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டு போய் முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். நாதன் கொள்ளி குடம் தூக்கி கொண்டு நடக்க, நாபனும் சுந்தரும் உடன் நடந்தனர், மணியத்தார் காலின் நோவையும் பொருட்படுத்தாது கெந்தி கெந்தி நடந்தார்.

ஆனந்தசங்கரி, கிருஷ்ணராஜா, சுப்பையா மாஸ்டர், டீ. ஆர். ஓ, மார்க்கண்டு விதானையார், மற்ற விதானைமார், மற்றும் பிரமுகர்கள், உறவினர், ஊரவர், கிளிநொச்சி பிரதேச மக்கள், ஆசிரியர்கள், டீ. ஆர். ஓ.கந்தோர் அலுவலர்கள், சங்கத்தில் வேலை செய்வோர்   எல்லோரும் விதானையாரின் மரண ஊர்வலத்தில் வந்தார்கள். மகாலிங்கம் தகப்பன் சென்ற அதே பாதையில், கிளிநொச்சி பிரதேச மக்கள் திரண்டு வர தனது இறுதிப் பயணத்தை ஆரம்பித்தார்.

மரண ஊர்வலம் ஒரு மைல் தூரம் பூனகரி வீதியால் போய், வடக்கு பக்கமாக சுடலையை நோக்கித் திரும்ப, நாதன் வந்த வழியை திரும்பிப் பார்த்தான். மக்கள் ஒரு மைல் தூரத்தில் வீட்டிற்கும் அப்பால் ஊர்வலத்தில் இணைந்து கொள்ள காத்திருப்பதையும், வீதியின் இரு பக்கமும் மக்கள் கண்ணீருடன் கூட்டமாக நின்று ஊர்வலத்தை பார்வையிட்டதையும் கண்டு “என்ரை ஐயாவுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்குதா? எத்தனை பேரின் அன்பை சம்பாதித்து வைச்சிருக்கிறார்.” என்று கண்ணீருடன் நினைத்தான்.

ஊர்வலம் பாதையை விட்டு காட்டில் இறங்கியது. நாதன் தன்னோடு நடந்து வந்து கொண்டிருந்த எம்.பி ஆனந்தசங்கரியிடம், “ஐயா நீங்கள் இவ்வளவு தூரம் நடந்து வந்ததே போதும். நீங்கள் திரும்பிப் போங்கோ, இனி பாதை கல்லும் முள்ளுமாயிருக்கும்.” என்னு சொல்ல, அவர் “டேய், விதானையார் உங்களுக்கு மட்டும் தகப்பன் இல்லை, அவர் எனக்கும் தகப்பன் தான், நான் சுடலை வரைக்கும் நடந்து வருவன்.” என்று கூறியபடி நடந்தார்.

சுடலையிலும் சனங்கள் நிறைந்திருந்தார்கள். விறகை சீராக வெட்டி அடுக்கியிருந்தார்கள். மகாலிங்கம் விறகுகளின் மேல் கிடத்தப்பட்டார். நாபன் துயரம் தாங்காது “ஐயோ, என்ரை ஐயா” என்று சுந்தரின் தோளில் சாய்ந்து அழுதான். நாதன் கொள்ளிக்குடத்துடன் மூன்று முறை தகப்பனை சுற்றி வர, பரமர் ஒவ்வொரு சுற்றுக்கும் கொள்ளிக்குடத்தை கத்தியால் கொத்தினார்.

நாதன் கொள்ளி வைத்து விட்டு முகத்தை கைகளால் மூடிய படி விம்மினான்.

மணியம் மாமா நாதனையும் நாபனையும் “நீங்கள் இனி திரும்பி பாராமல் போங்கோ” என்று இருவரையும் சுந்தருடன் அனுப்பி விட்டார். நாதனும் நாபனும் சுந்தருடன் பூனகரி வீதியில் நின்று கண்ணீர் மல்க திரும்பிப் பார்த்தார்கள். தீ வானுயர கொளுந்துவிட்டு எரிவது தெரிந்தது. ஒரு சகாப்தம் இன்றுடன் முடிவுற்றது என்று மூவரும் உணர்ந்தார்கள்.

.

நிறைவு பெற்றது..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/

பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/

பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/

பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/

பகுதி 36 –  https://vanakkamlondon.com/stories/2021/05/111664/

பகுதி 37 –   https://vanakkamlondon.com/stories/2021/05/112697/

பகுதி 38 –   https://vanakkamlondon.com/stories/2021/05/113713/

பகுதி 39 –   https://vanakkamlondon.com/stories/2021/06/114747/

பகுதி 40 –  https://vanakkamlondon.com/stories/2021/06/115804/

பகுதி 41 –  https://vanakkamlondon.com/stories/2021/06/116949/

பகுதி 42 –  https://vanakkamlondon.com/stories/2021/06/118039/

பகுதி 43 –  https://vanakkamlondon.com/stories/2021/06/119015/

பகுதி 44 –  https://vanakkamlondon.com/stories/2021/07/120022/

பகுதி 45 –  https://vanakkamlondon.com/stories/2021/07/121109/

பகுதி 46 –  https://vanakkamlondon.com/stories/2021/07/122111/

 பகுதி 47 – https://vanakkamlondon.com/stories/2021/07/123126/

 பகுதி 48 –  https://vanakkamlondon.com/stories/2021/08/124048/

 பகுதி 49 –  https://vanakkamlondon.com/stories/2021/08/125071/

 பகுதி 50 –  https://vanakkamlondon.com/stories/2021/08/126095/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More